ஊரக உள்ளாட்சியில் வெற்றிபெற்ற கம்பளத்தார்கள் பதவியேற்பு! தலைவர்கள் வாழ்த்து!
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித்தேர்தல் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைப்பெற்றது. இத்தேர்தலோடு இணைந்து பிற மாவட்டங்களில் காலியாக உள்ள ஊராக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது. இந்தத்தேர்தல் பெரும்பாலும் வடமாவட்டங்களில் நடைபெற்றதால் கம்பளத்தார்களுக்கு வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. இருந்தபொழுதும் கிடைத்தவாய்ப்புகளில் போட்டியிட்ட கம்பளத்தார்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர்.
அந்தவகையில் இராணிப்பேட்டை மாவட்டம், வலாஜாபேட்டை ஒன்றியம், 5-வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட புவனேஸ்வரி பாண்டியன் திமுக சார்பில் அமோகவெற்றி பெற்றார். அதேபோல் தென்காசி மாவட்டம் சுப்பிரமணியம் ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வழக்கறிஞர்.இராம்குமார் அவர்கள் மகத்தான வெற்றிபெற்றுள்ளார். இதில் வலாஜாபேட்டை ஒன்றியத்தில் கம்பளத்தார்கள் வாக்குகள் முற்றிலும் இல்லாத நிலையிலும், சுப்பிரமணியம் ஊராட்சியில் சொற்ப வாக்குகள் இருந்தபோதிலும் இரு வேட்பாளர்களும் மகத்தான வெற்றிபெற்றுள்ளனர்.
இதுதவிர தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் ஒன்றியத்தில் வேலிடுபட்டு ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட வீரப்பெருமாள் அவர்கள் வெற்றிபெற்றுள்ளார். அதேபோல் இதே தூத்துக்குடி மாவட்டத்தில் புதூர் ஒன்றியத்தில் உள்ள சின்னவ நாயக்கன்பட்டி ஊராட்சிமன்றத்தலைவர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் எர்ரையா அவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உள்ளாட்சிப்பிரதிநிதிகள் நேற்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டனர். இதில் வெற்றிபெற்ற கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த உள்ளாட்சிப்பிரதிநிதிகளும் பதவிப்பிரமானம் எடுத்துக்கொண்டனர். பதவி ஏற்றுக்கொண்ட தலைவர்கள் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, வட்ட, ஒன்றியச்செயலாளர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைவர்களுக்கு சமுதாய தலைவர்களும், பொதுமக்களும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரித்துக்கொண்டனர்.