அம்பலப்பட்டுப்போன சதி! - மாணவச்செல்வங்களுக்கு இயற்கை வழங்கிய நீதி!
கடந்த அதிமுக ஆட்சியின் இறுதுநாளில் யாருக்கும் தெரியாமல், முறையான ஆலோசனை, விவாதம் ஏதுமின்றி கொண்டுவரப்பட்ட வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால், எம்பிசி பிரிவில் உள்ள மற்ற 115 சமுதாய மாணவ-மாணவியர்களின் கல்வி வாய்ப்பும், வேலைவாய்ப்பு உரிமையும் கடுமையாக பாதிக்கப்படும் என்று ஆரம்பம் முதலே எதிர்ப்பு நிலவிவருவது அனைவரும் அறிந்ததே. இந்த எதிர்ப்புகளை புறந்தள்ளிய எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு, தேர்தல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக வைத்து ஒரேநாளில் 08/2021 சட்டத்தை கொண்டுவந்து, அடுத்தநாளே ஆளுநர்க்கு அனுப்பி ஒப்புதல் வாங்கி, உடனடியாக சட்டத்தை நிறைவேற்றியது.
இதை எதிர்த்துப்போராடிய 115 சமுதாயங்கள், அனைத்திந்திய அண்ணா திமுக அரசை எதிர்த்து தேர்தல் பிரச்சாரம் செய்தது திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்க உறுதுணையாக இருந்தது. கழக ஆட்சி வந்தால் அனைத்து சாதியினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும் என்ற இன்றைய தமிழக முதல்வரின் அன்றைய தேர்தல் பிரச்சாரப்பேச்சு இச்சமூகங்களுக்கு நம்பிக்கையளித்தது.,அதற்கு ஏற்றாற்போல் தமிழக முதல்ராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒவ்வொரு திட்டத்தையும், முன்னெடுப்புகளையும் தீர ஆராய்ந்து, வல்லுனர்குழுவின் ஆலோசனைகளைப்பெற்று, அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு உலகையே தன்பக்கம் திரும்பிப்பார்க்கும் வகையில் செயல்படத் தொடங்கியது. தமிழக முதல்வரின் செயல்பாடுகளைப் பாராட்டி முன்னனி இந்திய, அமெரிக்க நாளிதழ்கள் எல்லாம் செய்தி வெளியிட்ட நிலையில், இடஒதுக்கீடு பிரச்சினையிலும் தமிழக அரசின் செயல்பாடு அனைவரும் ஏற்றுக்கொள்ளும்வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை 115 சமுதாயத்தினர் மத்தியிலும் இருந்து வந்தது.
ஆனால் இந்த எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கும் வகையில் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிட்டதோடு,வழக்கு விசாரணையின்பொழுதும் உயர்நீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டிற்கு ஆதராவன வாதங்களை அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டது. அப்பொழுதுதான் எடப்பாடி அரசு சென்ற அதே வழியில்தான் இந்த அரசும் செயல்படுகிறது என்ற உண்மையை இச்சமுதாயத்தினர் உணர ஆரம்பித்தனர். அம்பாசங்கர் வன்னியர் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலின்றி தவறான புள்ளி விபரங்களோடு, தன்சாதியினரை மிகைப்படுத்தியும், பிற சாதியினரை திட்டமிட்டே குறைத்தும் காட்டிய அம்பாசங்கர் வன்னியரின் புள்ளிவிபரங்களையே ஆதாரமாகக் கொண்டு இந்த அரசும் நீதிமன்றத்தில் வாதாடியது.
கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தொடர்ந்து நடைபெற்றுவரும் வழக்கில் பல தடைகளைத்தாண்டி வழக்கு விசாரணை நடைபெற்று, நேற்று முன்தினம் (25.10.2021) எழுத்துப்பூர்வமான வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டு, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய நிலையில், தங்கள் சமுதாய மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய 10000-க்கும் அதிகமான இடங்கள் வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் பறிபோனதாக சமூகநீதி கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
அதைமெய்ப்பிக்கும் வகையில் வழக்கு விசாரணை முடிவடையும் வரை காத்திருந்த தமிழக அரசு நேற்று மாலை வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களில் வன்னியர் அல்லாத 115 சமூகங்களுக்கு வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அரசாணை வெளியிடக்காரணமாக கூறப்படுவது யாதெனில், வன்னியர் அதிகமுள்ள வடமாவட்டங்கள் தவிர்த்து மாநிலத்தின் பிறபகுதிகளில் உள்ள கல்லூரிகளில், வன்னியருக்கான 10.5 விழுக்காடு இடங்களை நிரப்பமுடியாமல், மிக அதிகப்படியான காலியிடங்கள் இருப்பதுதான் என்று சொல்லப்படுகிறது. இதனால பல தனியார் கல்லூரிகளில் வகுப்புகளில் போதிய மாணவர் சேர்க்கையில்லாததால் தொடர்ந்து வகுப்புகளை நடத்தமுடியாத சூழல் நிலவுவதாகத்தெரிகிறது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற கல்லூரி நிர்வாகங்கள், உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வலியுறுத்தியதாக தெரிகிறது. வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், குட்டு வெளிப்பட்டு வழக்கின் போக்கையே மாற்றிவிடும் என்று நினைத்த அரசு, வழக்கு விசாரணை முடிந்த அடுத்தநாள் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வாய்ப்பினை தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட வன்னியர் அல்லாத இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவ-மாணவியர் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் சமூகநீதி கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை கற்றரிந்த கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டுமாய் வேண்டுகோள் விடுத்துள்ளது.