ப்ளீஸ்....தொடர்ந்து வஞ்சிக்காதீங்க முதல்வரே! அது யாருக்கும் நல்லதல்ல!
வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது அனைவரும் அறிந்ததே. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் 7 கேள்விகளை முன்வைத்து, இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தையும், இடஒதுக்கீடு சம்மந்தமான பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளையும் அலசி ஆராய்ந்து தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது.
இத்தீர்ப்பினால் முகத்திரை கிழிந்த அரசியல் கட்சியினர் சிலர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு ஏற்றாற்போல் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரும் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறியிருந்தார். மேலும், இத்தீர்ப்பில் அரசிலமைப்பு சட்ட திருத்தம் 102 மற்றும் 105ஆவது சட்டதிருத்தம் குறித்தும் சில கேள்வி எழுப்பியிருந்தது. இச்சட்டதிருத்தத்தின் மூலம் வன்னியர் இடஒதுக்கீடு சட்டம் 8/2021 கொண்டு வந்தபொழுது மாநில அரசுக்கு சட்டமியற்றும் அதிகாரமில்லாமல் இருந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருந்தது.
தற்பொழுது 105-ஆவது சட்ட திருத்தம் செய்யப்பட்ட நிலையில், மாநில அரசுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் இருப்பதாக பாமக தரப்பு வாதத்தை முன்வைத்து, அவசர சட்டம் கொண்டுவர தமிழக அரசை நிர்ப்பந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள சமூகநீதி கூட்டமைப்பு, வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் காரணிகளில் ஒன்றுதான் இச்சட்ட திருத்தமே தவிர, மேலும் பல காரணிகளை நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளதைக் குறிப்பிட்டு, வன்னியர் மட்டுமல்ல எந்த ஒரு தனிப்பட்ட சாதிக்கும் இட ஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடமே இல்லை என உறுதிபட தெரிவித்துள்ளது.
எனவே தமிழக அரசு இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், புதிய சட்டத்திபடி நடைபெற்ற பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கையை ரத்து செய்துவிட்டு, பழைய 20 விழுக்காடு இடஒதுக்கீடுப்படி மீண்டும் மாணவர் சேர்க்கை ந்டத்த வலியுறுத்தி சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கப்பட்டு வருகிறது. இக்கடிதத்தில் தமிழக அரசு வழக்கறிஞரே புள்ளி விபரம் தமிழக அரசிடம் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள நிலையுல், மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கே ஆபத்து நேரலாம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.