மண்டியிடாத மானம்! வீழ்ந்துவிடாத வீரம்! - ஊமைத்துரையின் 220-வது நினைவுநாள்.
பாஞ்சாலங்குறிச்சி பாளையம் வீழ்த்தப்பட்டு, பாஞ்சை கோட்டை அழித்து துடைத்தெறியப்பட்டு, மாவீரன் கட்டபொம்மனை தூக்கிலிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தில் கொக்கரித்துக் கொண்டிருந்த வேளையில் பாளையக்காரர்களும், பல சிற்றரசர்களும் வெள்ளையருக்கு அடிபணிந்து வெஞ்சாமரம் வீசத்தொடங்கினர். மறைந்திருந்த மாவீரன் ஊமைத்துரை, மருது சகோதரர்கள் உதவியோடு மண்மேடாகிப்போன பாஞ்சை கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பி கம்பளத்தாரின் மண்டியிடாத மானத்தை உலகுக்கு பறைசாற்றியதோடு, ஆங்கிலேயர்களுக்கு பெரும் அச்சமூட்டிய மாவீரன் ஊமைத்துரை. ஆங்கிலேயர்களிடம் பாளையங்கள் தொடர்தோல்விகளை சந்தித்தாலும், வீரம் செறிந்த நெஞ்சுரத்தோடு வெள்ளையர்களை மீண்டும் போர்க்களத்தில் எதிர்கொண்டு தூக்கிலடப்பட்டு வீரமரணமடைந்த ஊமைத்துரையின் 220-நினைவுநாள் தமிழகமெங்கும் இன்று அனுசரிக்கப்படுகிறது.
பாஞ்சை கோட்டையிலுள்ள மாவீரன் ஊமைத்துரை சிலைக்கு நேரடி வாரிசுதாரர்களில் ஒருவரான சோமசுந்தர கட்டபொம்மு குடும்பத்தினர் திருமதி.வீரசக்கம்மாள், திருமதி.இந்துமதி சேர்மைராஜ் ஆகியோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாமக்கல், இராசிபுரத்தில் விடுதலைக்களம் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் நிறுவனத்தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் மாவீரன் ஊமைத்துரையின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.