மேல்முறையீட்டு மனு! தமிழக அரசை தோலுரிக்கும் சமூகநீதி கூட்டமைப்பு!
வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அம்மனுவில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமூகநீதி கூட்டமைப்பு விளக்கமளித்துள்ளது. அதன் விபரம் வருமாறு....
மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் எழுப்பியுள்ள சட்ட கேள்வி 1
மாண்புமிகு உயர்நீதி மன்றம் இந்திரா சஹானி வழக்கில் 9 நீதிபதிகள் உட்பிரிவு செய்ய அனுமதிக்கும் போது சின்னையா வழக்கில் 5 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் முடிவு செய்தது சரியா?
உயர்நீதிமன்ற தீர்ப்பின் உண்மையான சட்ட நிலை 1
இந்திரா சஹானி வழக்கின் 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே சின்னையா வழக்கில் 5 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியிருப்பதால் அந்த தீர்ப்பின் அடிப்படையில் முடிவு செய்ததுதான் சரி. ஒரே நிலையில் இருப்பவர்களை வேறு வேறு பிரிவுகளாக வைக்கவே முடியாது. உட்பிரிவுகள் செய்ய இரண்டு பிரிவுகளுக்கும் பெருத்த சமூக கல்வி அளவுகளில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்று 9 நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். எனவே உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியான சட்டப்படியான, ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய எந்த முகாந்தரமும் இல்லை. அரசின் மனுவை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும்.
மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் எழுப்பியுள்ள சட்ட கேள்வி 2
மாண்புமிகு உயர்நீதி மன்றம் ஒத்த பிரிவினரை மேலும் பிரிக்கலாமா என்ற கேள்வி 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வரும்போது ஒத்தபிரிவினரை மேலும் பிரிக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கியது சரியா?
உயர்நீதிமன்ற தீர்ப்பின் உண்மையான சட்ட நிலை 2
7 நீதிபதிகள் விசாரிக்கும் பிரச்சனை வேறு இங்கு எந்த வேறுபாடும் இல்லாமல் மூன்று பிரிவாக பிரித்தது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்ற தீர்ப்பு மிகச் சரியானது.