பழமையையும், பாரம்பரியத்தையும் கட்டிக்காக்கும் கம்பளத்தார் கிராமம்!
ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பெரியபுலியூர் கிராமம் வளையக்காரப்பாளையத்தில் வசிக்கும் தொட்டிய நாயக்கர் சமூகத்தைச்சேர்ந்த திரு.பொம்மினி (எ) பொம்ம நாயக்கர் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் "ஊர் நாயக்கர்" (கொத்துக்காரர்) பதவியில் பரம்பரை பரம்பரையாக இருந்து வருகின்றனர். திரு.பொம்மநாயக்கர் அவர்களுக்கு முன், அவருடைய அப்பா போத்த நாயக்கரும், அவரின் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் காலத்திலிருந்தே வழி வழியாக இப்பதவியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. "ஊர்நாயக்கர் பொம்மினி" அவர்கள் கடந்த முப்பது வருடங்களுக்கு முன் பதவியேற்றதிலிருந்து, இதுநாள்வரை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் செயல்பட்டு நாயக்கர் வம்சத்தில் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் தன்னலம் பாராது கட்டிக் காப்பாற்றி வந்ததாக அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமைபொங்க குறிப்பிடுகின்றனர்.
தற்பொழுது வயோதிகத்தின் காரணமாக தனது மூத்த மகன் திரு.சென்னியப்பன் அவர்களுக்கு கடந்த 24.11.2021,புதன்கிழமை, பிலவ வருடம் கார்த்திகை மாதம் 8ஆம் நாள் காலைவேளையில் வளையக்காரபாளையம் கிராமத்திலுள்ள புது மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர் கோவில் ஆலயம் முன்பாக செட்டிபாளையம் பட்டக்காரர் திரு.வெங்கடசாமி அவர்கள் முன்னிலையில் ஊர்நாயக்கர் பட்டத்தை வழங்கினார். இந்த நிகழ்வின்பொழுது கோவில் "மணி பூசாரி" திரு.ராமசாமி, "அக்னி பூசாரி" திரு.நாகராஜன், "படைக்கலம் பூசாரி" திரு. கந்தசாமி மற்றும் கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு புதிதாக பட்டம்சூட்டப்பட்ட ஊர்நாயக்கர் திரு.சென்னியப்பன் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்
தகவல் உதவி : திரு.நடராஜன்.