கம்பாளா பந்தயத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற கம்பளத்தார்!- கேரளாவில் பரபரப்பு!
பொங்கல் திருவிழா வந்துவிட்டாலே ரேக்ளா பந்தையங்கள், ஜல்லிக்கட்டு போட்டிகள் என தமிழகத்தில் கோலாகல கொண்டாட்டங்கள் களைகட்டும். இதற்காகவே காளைகள் சொந்த பிள்ளைகள் போல வளர்க்கப்படும். தமிழகத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற இடங்கள் ஜல்லிக்கட்டுக்கு மிகவும் பிரபலமானவை.
நவீன கால அறிவியல் வளர்ச்சியின் பயனாக கோடிக்கணக்கில் மதிப்புள்ள அதிவேக ரேஸ் கார்களும், ரேஸ் பைக்குகளும் வந்துவிட்டாலும், ரத்தமும் சதையுமாக மனிதனோடும், மனிதன் வாழ்வியலோடும் இரண்டரக்கலந்து விட்ட விலங்குகளை வைத்து நடக்கும் போட்டிகள் ஆதி காலத்திலிருந்தே நடந்து வருபவை. அப்படி மனிதனின் வளர்ப்புப் பிராணியான காளைகள் கொண்டு நடைபெறும் போட்டிகளில் வரும் சுவாரஸ்யம் நிச்சயம் கார் - பைக் போட்டிகளில் இருக்காது. அப்படி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தையங்கள் நடைபெறுவது போலவே கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் 'கம்பாளா' என்ற எருது பூட்டிய ரேஸ் பந்தையங்கள் நடத்தப்படுகின்றன.
'கம்பாளா' என்னும் இந்த எருது பந்தையமானது மேற்குக் கடற்கரையோர மாநிலங்களான கர்நாடாக மற்றும் கேரளாவில் உள்ள கிராமங்களில் அந்தந்தத கிராம தலைவர்கள்,ஜமீன்தார்கள், பெருநிலக்கிழார்கள் வயல்களில் நடத்தப்படும் ஒரு விளையாட்டு ஆகும்.
இந்த கம்பாளா போட்டிகள் பொதுவாக ஆண்டுதோறும் நவம்பர் மாதம் முதல் மார்ச் வரை நடைபெறுகின்றன. ஒவ்வொரு வருடமும் கரையோர கர்நாடாக கிராமங்களில் 45க்கும் மேற்ப்பட்ட கம்பாளா போட்டிகள் நடைபெறுகின்றன.
கம்பாளா விளையாட்டு போட்டிகள் அளவான நீர் மற்றும் சேறு நிரம்பிய வயல்வெளிகளில் நடத்தப்படுகின்றன. இரண்டு எருதுகள் ஒன்றாக பூட்டப்பட்டு ஒரு சின்ன பலகை போன்ற ஒன்றின் மீது நின்றுகொண்டு ஒருவர் இந்த எருதுகளை ஓட்ட வேண்டும். பொதுவாக நவீன விவசாய கருவிகள் வரும் வரை கடந்த இருபது முப்பது ஆண்டுகள் முன்பு வரை நெல் வயல்களில் நடவுப்பணி தொடங்கும் முன் வயலை சமப்படுத்துவதற்காக "பரப்புப்பலகை" பயன்படுத்தப்படும். பரப்புபலகை போன்ற சின்ன பலகை இந்த விளையாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை போலவே இந்த கம்பாளா போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு தங்க சங்கிலி, வெள்ளிப்பரிசுகள் மற்றும் மாடுகள் போன்றவை வழங்கப்படுகின்றன.
சமீப காலமாக இந்த கம்பாளா போட்டிகள் 'கம்பாளா கமிட்டி' என்பதினால் விரிவாக திட்டமிடப்பட்டு ஜல்லிக்கட்டை போன்றே முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்த கம்பாளா போட்டிகள் ஹானே ஹலகே, ஹாக்க ஹிரியா, அட்ட ஹலகே என பல விதமாகவும் நடத்தப்படுகின்றன. கம்பாளா போட்டிகளுக்கான விதிகள் நடைபெறும் இடங்களைப்பொறுத்து மாறுபடுக்கின்றன. இந்த போட்டிகள் வயல் வெளிகள், பெரிய வாய்க்கால்கள் போன்ற இடங்களில் தனியாகவும், அணியாகவும் கலந்துகொள்ளும் போட்டிகள் நடக்கின்றன.
பாரம்பரியமாக நடத்தப்படும் இந்த கம்பாளா போட்டிகள் பந்தையமாக இல்லாமல் கடவுளுக்கு நன்றி சொல்லும் விதமாக விளைச்சல் முடிந்த பிறகு அவர்களுடைய வயல்களை சுற்றி எருதுகளை ஓட விடுகின்றனர்.
இந்த பந்தையத்தில் பங்குபெறுவதற்கு முன்பாக இதில் கலந்துகொள்ளும் காளைகள் மற்றும் எருதுகள் கண்ணைக்கவரும் விதமாக அலங்கரிக்கப்படுக்கின்றன. மேலும் வயதான எருதுகள் முன்னதாகவும் அதனை தொடர்ந்து இளைய எருதுகளும் போட்டிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன.
ஜல்லிக்கட்டை போன்றே இதில் கலந்துகொள்ளும் வீரர்கள் மிகவும் வலுவுள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியம். சிறிய பலகையின் மீது நின்றபடியே இந்த காளைகளை ஒட்டி யார் குறைந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடக்கின்றாரோ அவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார்.
இப்படியான "கம்பாளா பந்தயம்" கடந்த வாரம் கேரள மாநிலம், பாலக்காடு அருகேயுள்ள மலம்புழா-வில் நடைபெற்றது. இப்போட்டியில் மலம்பொழா-வில் வசித்துவரும் நமது கம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த "பிரசாந்த்" முதலிடம் பெற்று வெற்றி பெற்றார். இவர் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக முதல் பரிசை தட்டிச் செல்கிறார் என்பது குறிப்பிட்டத்தக்கது. இதுதவிர வெவ்வேறு பிரிவிகளிலும், வெவ்வேறு வகயிலும் நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும் "கம்பளத்தார்"களை தட்டிச்சென்றனர் என்பது சிறப்புக்குறியது.
இப்போட்டியின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், முதலிடம் பிடித்த "பிரசாந்த்"-க்கும் பிற வெற்றியாளர்களுக்கும் கேரள மாநில அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு பரிசு வழங்கி பாராட்டினர்.