கட்டபொம்மனாரின் பிறந்தநாளில் ஆயிரம் வாகனங்களில் அணிவகுக்க தயாராகும் கொங்கு மண்டலம்!
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 263-வது பிறந்தநாள் விழா வரும் ஜனவரி மாதம் 3-ஆம் தேதி தமிழகமெங்கும் படு விமர்சையாக கொண்டாட தமிழகமெங்கும் சிறப்பான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன. சமுதாய அமைப்புகள் பல மதுரையில் "மாஸ்" காட்ட தயாராகி வருகின்றன. தோழமை அமைப்புகள், அரசியல் கட்சிகள், அமைச்சர் பெருமக்களை மதுரைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளன. இதுதவிர மாநிலம் முழுவதும் கட்டபொம்மன் சிலை அமைந்துள்ள இடங்களிலும், பிற பகுதிகளில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இது தவிர கோவில்களில் அர்ச்சனை, அன்னதானம் போன்ற ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. விடுதலைக்களம் கட்சியின் சார்பில் மாவீரன் பிறந்த நாள் நினைவாக ஆங்காங்கே ஒரு லட்சம் மரக்கன்றுகளை ஜனவரி 3-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிவரை நடப்படும் என்று செய்தி வெளியாகியுள்ளது.
கோவை மாவட்டம் ஈச்சனாரியில் மாவீரன் பிறந்தநாளை மிகுந்த எழுச்சியுடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவை மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம், கோவைப்புதூர், ஆறுமுகக்கவுண்டனூர், காரமடை, சின்னத்தொட்டிபாளையம், அன்னூர்,மாச்சநாயக்கன்பாளையம், பேரூர், நெகமம், இராமபட்டினம், சின்னப்பம்பாளையம் உள்ளிட்ட பலபகுதிகளில் இருந்து ஒன்றிணைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று ஈச்சனாரியில் உள்ள மாவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இளையோர் பட்டாளம் முழுவீச்சில் ஏற்பாடு செய்து வருவதாக தெரியவருகிறது.