மாவீரன் பிறந்தநாள்- நத்தத்தில் இராமமோகன்ராவ் பங்கேற்கிறார்!
பாஞ்சை பெரு வேந்தன் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 263-வது பிறந்தநாள் விழா வரும் 3-ஆம் தேதி தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை சமுதாய அமைப்புகள் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் கோவையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாவீரன் கட்டபொம்மன் சிலை அமைந்துள்ள ஈச்சனாரிக்கு ஆயிரம் வாகனங்களில் அணிவகுக்க இளைஞர்கள் தயாராகி வருகின்றனர்.
ஏற்கனவே நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து ஒரு லட்சம் மரக்கன்றுகளை ஜனவரி மாதம் முழுவதும் நட இருப்பதாக விடுதலைக்களம் அறிவித்திருந்தது. அந்நிகழ்ச்சியோடு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகேயுள்ள எர்ரம நாயக்கன்பட்டியில் விடுதலைக்களம் கட்சியும் இராஜகம்பளத்தார் புரட்சிப்படையும் இணைந்து மாவீரன் கட்டபொம்மனின் பிறந்தநாளை கொண்டாட இருப்பதாக அறிவித்துள்ளன. இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளரும், RMR பாசறை நிறுவனருமான இராமமோகன்ராவ் ஐஏஎஸ் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வரும் இராமமோகன்ராவ் அவர்கள், மதுரையிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தியபின் வாகனங்கள் புடைசூழ எர்ரமநாயக்கன்பட்டி அழைத்துச் செல்லப்படுகிறார். எர்ரமநாயக்கன்பட்டியில் கொடியேற்றி வைத்து பின் அங்குவைக்கப்பட்டுள்ள மாவீரன் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பிறந்தநாள் நினைவாக மரக்கன்று நட்டு வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சிக்குப்பின் வடமதுரை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கம்பளத்தார் சமுதாயத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவருமான தம்பி நாயக்கர் அவர்களில் இல்லம் சென்று அவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.
இராமமோகன்ராவ் வருகைக்கான ஏற்பாடுகளை விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், சு.செல்லப்பாண்டி, செ.அழகர்சாமி, எம்.பிரகாஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.