மாமன்னர் திருமலை நாயக்கரின் 439-வது பிறந்தநாள்.
முத்துக்கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தவர் திருமலை நாயக்கர். இவரது இயற்பெயர் திருமலை சவுரி நாயுனு அய்யலுகாரு என்பதாகும். முதலாம் முத்துவீரப்பர் சந்ததியின்றி இறந்தமையால் அவரது தம்பி திருமலை நாயக்கர் மதுரை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.
மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையிலான காலத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் அயலிலிருந்த முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை சிதையாமல் காப்பாற்றினார். பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி இவரது ஆட்சிக்குள் அடங்கியிருந்தது.
மதுரையை விழாநகரமாகவும், கலைநகரமாகவும் மாற்றியமைத்தார் திருமலை நாயக்கர். கட்டிடக்கலை உள்ளிட்ட கலைகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார். பழைய கோயில்களைத் புணரமைத்தவர். திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது.
தென்னிந்திய வரலாற்றில் அழியாப்புகளைப் பெற்ற மாமன்னர் திருமலை நாயக்கரின் 439-வது பிறந்தநாள் இன்று மதுரையில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாமன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் நேற்று முதலே மதுரையில் குவியத்தொடங்கியுள்ளனர்.
மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ, அகில இந்திய தெலுகு சம்மேளனத்தலைவர் பேராசிரியர் சிஎம்கே.ரெட்டி, ஆர்எம்ஆர் பாசறை நிறுவனர் இராமமோகன்ராவ், விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் மாமன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர்.