நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு களமிறங்கியது விடுதலைக்களம்!
மிகநீண்ட இழுபறிக்குப்பின் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடத்தப்பட்டு பிப்-22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சி, 138 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் உள்ள 12838 வார்டு உறுப்பினர் பதவிக்கான நேரடி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள். மறைமுக தேர்தல் என்றழைக்கப்படும் இத்தேர்தலில் 1,298 பதவிகளுக்கான தேர்தல் 04.03.2022 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சிகளில் நேரடி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (28.01.2022) தொடங்கி பிப்ரவர் 4 வரை நடைபெறவுள்ளது. வேட்புமனு ஆய்வு செய்தல் பிப்'5 ஆம் தேதி, மனுக்களை திரும்பப்பெறுதல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் பிப்'7 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இதனிடையே கம்பளத்தார் சமுதாய மக்கள் அதிகமுள்ள சில பகுதிகள் தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் இணைக்கப்பட்டு வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அங்கு கட்சி சின்னத்தில் போட்டியிடக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும், அந்தந்த மண்டலங்களில் ஆதிக்கத்திலுள்ள சாதியினர் மாவட்ட,ஒன்றிய கழக செயலாளர்களாகவும் அமைச்சர்களாகவும் இருப்பதால் தங்கள் சாதியினருக்கு போட்டியிடும் வாய்ப்புகளை வழங்க முயற்சிப்பதாக பிரதான கட்சிகளில் உள்ள சிறுபான்மை சாதியினர் கவலை தெரிவித்துள்ளனர். இந்தப்போக்கு ஆளும்கட்சியில் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
பிரதான கட்சிகளில் நிலைமை இவ்வாறு இருக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தவில் விடுதலைக்களம் கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் அறிவித்துள்ளார்.
நேற்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் விடுதலைக்களம் கட்சியின் மாநில பொறுப்பாளர் பிரதாபன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கூகலூர் பேரூராட்சி 13 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திருமதி.ரஞ்சிதா சிவராஜ் (30), 6 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு த.பிரகாஷ் (27) ஆகியோர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் வெளியிட்டார். தொடர்ந்து மற்ற பகுதிகளிக்கான வேட்பாளர் பட்டியல் ஒரிரு நாளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.