உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் வழக்கு விசாரணை!
வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான வழக்கு விசாரணையை இன்று மீண்டும் தொடர இருக்கிறது உச்சநீதிமன்றம். கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய விசாரணை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியின் வேண்டுகோள் குறித்து முதலில் முடிவுசெய்துகொள்ள விரும்பிய நீதிபதிகள் முதல்நாள் வழக்கறிஞர்கள் வாதத்திற்குப்பிறகு அக்கோரிக்கையை நிராகரித்தனர்.
அதனையடுத்து 16-ஆம் தேதி மேல்முறையீட்டு மனுக்கள் மீதான நேரடி விசாரணையை தொடங்கியது. அன்று தமிழக அரசில் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, எம்.என்.ராவ் உள்ளிட்டோர் வாதிட்டனர். அதனையடுத்து வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர். இன்னும் மனுதாரர்களான தமிழக அரசு சார்பில் முகில்ரோத்தகி, வில்சன், சிங்கி உள்ளிட்டோரும், பாமக தரப்பில் வைத்தியநாதன், ரவிவர்மகுமார் போன்ற மூத்த வழக்கறிஞர்களும் இன்று தங்கள் வாதங்களை எடுத்து வைப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பதில் வாதங்களை வைக்கவுள்ளனர்.