ஒற்றைச்சாதி சான்றதழே ஒரே இலக்கு! - நாமக்கல் பரபர...
தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 DNT சாமுதாயங்களுக்கு 1979 வரை DNT சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டு வந்த நிலையில் எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் DNC என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1980-இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அதிமுக வின் தோல்விக்கான காரணமாக பொருளாதார இடஒதுக்கீடு விசயத்தில் செய்த குளறுபடி பிரதானமாக கூறப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஆண்டே பொருளாதார இடஒதுக்கீடு எம்ஜிஆர், DNC சாதி வழங்கும் முடிவுகளையெல்லாம் ரத்து செய்து அரசாணை வெளியிட்டார்.
அதன் பிறகு சீரமரபினருக்கு DNT சாதி சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியம் காரணமாக DNC என்றே வழங்கினார். இதுகுறித்து கல்வியறிவு அற்ற DNT சமூகங்களுக்கு தெரியவில்லை.
2014-முதல் இக்கோரிக்கையை வலியுறுத்தி சீர்மரபினர் நலச்சங்கத்தினர் பல போராட்டங்களை நடத்தியும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.
இதற்கிடையே 2021-இல் வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் நடத்திய போராட்டங்களின் வலிமையை உணர்ந்துகொண்ட அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அம்மக்களின் வாக்குகளை கவர தாங்கள் ஆட்சிக்கு வந்தால் DNT சான்றியழ் வழங்கப்படும் என்று ஆலங்குளம் தொகுதி பிரச்சாரக்கூட்டத்தில் அறிவித்தார்.
இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி ஏறக்குறைய ஓராண்டை நிறைவு செய்யவுள்ள நிலையில் இன்னமும் அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி இன்று காலை 10 மணியளவில் விடுதலைக்களம் கட்சியின் சார்பில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
இக்கூட்டத்தின் முடிவில் நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட நாமக்கல், மோகனூர், இராசிபுரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு வட்டாட்சியர்களிடம் ஒற்றைச்சான்றிதழ் கோரி மனு வழங்கப்பட்டது.
இதேபோல் தமிழகமெங்கும் வட்டாட்சியர் அலுவலகங்களில் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் மனு வழங்கப்பட்டது.