கம்பளத்தார் வரலாற்றில் முதல்முறையாக...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் DNT ஒற்றைச்சான்றிதழ் கேட்டு போராடி வரும் 68 சாதியினரின் போராட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு காதுகொடுத்து கேட்கவில்லை என்றும் திமுக ஆட்சி அமைந்தவுடன் அம்மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால் திமுக ஆட்சி அமைந்து விரைவில் ஓராண்டு நிறைவுபெறவுள்ளது. இருந்தும் இதுவரை DNT ஒற்றைச்சான்றிதழ் கோரிக்கை நிறைவேறவில்லை. இதுகுறித்து பலமுறை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அனுப்பியும் கோரிக்கை நிறைவேறியபாடில்லை. எனவே 68- சமுதாயங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த ஆலோசித்து வருகின்றன.
தொட்டியநாயக்கர் சமுதாயத்தின் சார்பில் DNT கோரிக்கைக்காக விடுதலைக்களம் பல போராட்டங்களை ஏற்கனவே நடத்தியுள்ள நிலையில் தற்பொழுது முன்பைவிட தீவிரமாக போராடத்தயாராகி உள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் வரும் 11.04.2022 -அன்று தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு மனு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கான ஆலோசனைக்கூட்டங்கள் வட்டார அளவில் நடைபெற்றுவருவதாக தெரிவித்துள்ளார். கம்பளத்தார் வரலாற்றில் முதல்முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டத்தை நடத்தவிருப்பதாக கூறியுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தயாராகிவருவதாக தெரிவித்துள்ளார்.