எளிய மக்கள் இறுதியிலும் வென்றோம்! உதவிக்கரம் நீட்டிய நல் உள்ளங்களுக்கு சமர்ப்பணம்!
வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் 08/2021 சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது. ஒருமாத இடைவெளிக்குப்பிறகு இந்த வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஷ்வரராவ், கவாய் தலைமையிலான அமர்வு இன்று வழங்கியது.
இந்தியாவின் தலைசிறந்த மூத்த வழக்கறிஞர்களான அபிஷேக் சிங்வி, கபில்சிபல், முகில்ரோத்தகி, வில்சன்,சி.எஸ்.வைத்தியநாதன் போன்ற ஜாம்பவான்களை தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சியும் களமிறக்கி வாதாடியது. எதிர் தரப்பில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் சமுதாயம் சார்பில் ராஜீவ் தவான், கர்னல்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்ததோடு, தமிழகத்தில் இதுவரை ஜனார்த்தனம், தணிகாச்சலம், அம்பாசங்கர் ஆணையங்கள் பெயரில் நடந்த மோசடிகளுக்கு முடிவுகட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களில் ஒருசாதியின் ஆதிக்கம் நிலவி வந்த நிலையில் ஆணையத்தில் பணியாற்றியுள்ள பிற உறுப்பினர்கள் மனசாட்சியோடு செயல்பட்டு அரசியல் அழுத்தங்களுக்கு ஆட்படாமல் பிரதிநிதித்துவம் இல்லாத சிறிய சமூகங்களின் குரலாக இருந்து காப்பாற்றியுள்ளனர்.
இறுதி வெற்றியை எட்டியுள்ள இந்த சட்டப்போராட்டத்திற்கு நிதியுதவியளித்த தொட்டிய நாயக்கர் உறவுகளுக்கும், இப்பிரச்சினையில் முழுமூச்சாக தொடக்கத்திலிருந்து அரசியல் களத்திலும், போராட்ட களத்திலும், சட்டப்போராட்டத்திலும் தொடர்ந்து பாடுபட்டு வந்த விடுதலைக்களம் கட்சி, நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, இராஜகம்பளத்தார் மேன்மக்கள் அறக்கட்டளை, சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.