சமூகநீதியா! - சந்தர்ப்பவாதமா! - முதல்வர் எந்தப்பக்கம்?
வன்னியர் 10.5 விழுக்காடு சிறப்பு சட்டம் 8/2021-ஐ சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும். உச்சநீதிமன்றமும் ரத்து செய்யப்பட்ட நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட வன்னியர் அமைப்புகள் தமிழக முதல்வர் மீண்டும் இச்சட்டத்தை ஓரிரு வாரங்களில் கொண்டுவர வேண்டும் என்ற அழுத்தம் கொடுத்தனர்.
தமிழகத்தில் பல லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளநிலையில் அதைக் கைப்பற்றும் முனைப்பில் முழு வீச்சில் இறங்கியுள்ள வன்னியர் அமைப்புகளுக்கு ஆதரவு நிலைப்பாட்டுனே தமிழக அரசு செயல்பட்டு வருவதாக வன்னியர் அல்லாத சாதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இக்கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் திமுக அரசு பதவியேற்றுக்கொண்டதிலிருந்து தமிழக முதல்வரை சந்திக்க பலமுறை நேரம் ஒதுக்கக்கோரிய வன்னியர் அல்லாத சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பிற்கு இதுவரை நேரம் ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இன்று முதல்வரின் முகநூல் பக்கத்தில் வன்னியர் சமூகத்திற்கு 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு தொடர்பாக மேல்நடவடிக்கைக்கு துறை அமைச்சர்கள், சட்ட வல்லுனர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக பதிவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றம் ஏற்கனவே அம்பாசங்கர் அறிக்கையை பழைமையான ஒன்று என்று அறிவித்துள்ள நிலையில் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகத்திற்கும் சமூகநீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், சமூகநீதி மண் என்று பெருமை பேசும் தமிழக முதல்வர் உண்மையிலேயே சமூகநீதியை காக்கபோகிறாரா? அல்லது எடப்பாடி வழியில் சந்தர்ப்பவாத அரசியலை முன்னேடுப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.