சாதிவாரி கணக்கெடுப்பிற்குப்பின் இடஒதுக்கீடு! அமைச்சரிடம் வலியுறுத்தல்.
வன்னியர் 10.5 விழுக்காடு சிறப்பு இடஒதுக்கீடு சட்டம் 8/2021-ஐ சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ரத்து செய்துள்ள நிலையில், இதுதொடர்பாக பாமக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கவனஈர்ப்பு தீர்மானமும், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி அவர்களும் தமிழக முதல்வரை சந்தித்து மீண்டும் இச்சட்டத்தைக் கொண்டுவர வலியுறுத்தினர். இதுசம்மந்தமாக தமிழக முதல்வர் கடந்த 14.04.2022 அன்று அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் சட்டநிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று காலை 9 மணியளவில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 261 சாதிகள் அங்கம் வகிக்கும் சமூகநீதி கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள் தமிழக பிற்படுத்தப்பட்டோர், முகவும்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் R.S.இராஜகண்ணப்பன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி முறையான சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இதர புள்ளிவிபரங்களை திரட்டிய பின்னரே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
இதற்கு பதிலளித்துப்பேசிய அமைச்சர் அனைத்து சாதியினரின் மக்கள்தொகை புள்ளிவிபரங்களை திரட்டி, மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கேற்ப இடஒதுக்கீடு பிரித்து வழங்குவதே சரியானது என்பதை ஏற்றுக்கொள்வதாகவும், இதுகுறித்து அரசிடம் தெரிவிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
அமைச்சருடனான இந்த சந்திப்பில் இடம்பெற்ற குழுவில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் சென்னை,வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் ராமராஜ் கலந்துகொண்டார்.