EPS, OPS, K.S.அழகிரி, முத்தரசன் ஆகியோருடன் தலைவர்கள் சந்திப்பு!
வன்னியர் சாதிக்கு 10.5 விழுக்காடு வழங்கும் 8/2021 சிறப்பு சட்டத்தை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ரத்து செய்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தரப்பிலிருந்து மீண்டும் சிறப்பு சட்டத்தை இயற்றக்கோரி தொடர்ந்து தமிழக முதல்வரை சந்தித்து அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதனையடுத்து கடந்த 14.04.2022 அன்று தலைமைச்செயலகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டவல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் மீண்டும் வன்னியர் இடஒதுக்கீடு சிறப்பு சட்டம் கொண்டுவரப்படுமோ என்ற அச்சம் வன்னியர் அல்லாத மற்ற 261 சமூகங்களுக்கு எழுந்துள்ளது.
எனவே, உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி சாதிவாரி கணக்கெடுப்பு, சமூக, பொருளாதார புள்ளி விபரங்களை திரட்டிய பின்னரே இடஒதுக்கீட்டை பிரித்து அனைத்து சமூகங்களுக்கும் முறையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து சமூகநீதி கூட்டமைப்பினர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி.பழனிச்சாமி, துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி, இ.கம்யூ மாநில தலைவர் முத்தரசன் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினர். இந்தக்குழுவில் தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் பெ.இராமராஜ் கலந்துகொண்டார்.