ஆப்ரேஷன் 864 சக்சஸ்! கைவசமானது கால் கோடி மதிப்புள்ள சொத்து!
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், செங்குன்றம் அருகே வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி வெளிவட்ட சாலை அருகில் சுமார் 12000 சதுர அடியில் மூன்றடுக்குகள் கொண்ட கட்டிடத்தை கட்டி வருவது சமுதாய மக்கள் அறிந்ததே.
சமுதாய மாணவ/மாணவியர்களை போட்டித் தேர்வுகளுக்கு தயார் படுத்த வேண்டும் என்ற நோக்கில் கட்டப்பட்டு வரும் இக்கட்டிடத்தின் கட்டுமானப்பணி 2020 முதல் இரண்டு ஆண்டுகள் கொரோனோ பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஏற்பட்ட பெரும் நிதிநெருக்கடி காரணமாக மீண்டும் கட்டுமானப்பணியினை தொடங்குவதில் சிக்கல் இருந்த நிலையில் நமது சமுதாயத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், சங்கத்தின் மதிப்புமிக்க "பர்பிள் கிளப்" உறுப்பினர் உதவியுடன் கடந்த 2021 அக்டோபர் மாத இறுதியில் தொடங்கப்பட்டு, நாமக்கல் மாவட்ட தொட்டிய சமுதாய அறக்கட்டளையினரின் சீரிய முயற்சியால் கூடுதல் நிதி உதவி வழங்கப்பட்டதால் ஏறக்குறைய 95 சதவீதம் (எலக்ட்ரிகல் பணி தவிர்த்து) நிறைவடைந்துள்ளது.
சங்கத்தின் தொலைநோக்குத் திட்டங்களை "Mission 2025" என்ற பெயரில் செயல்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக வாய்ப்புகள் கிடைக்கும்பொழுதெல்லாம் சங்கத்திற்கு "நிலவங்கி"யை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர்'2021 சங்கக்கட்டிடத்திற்கு ஒட்டிய ரூ.25 லட்சம் மதிப்புள்ள 4.5 சென்ட் நிலத்தை கையகப்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏற்கனவே சங்கத்தின் கடன்சுமை ஏறக்குறைய 12 லட்சமாக இருந்துவரும் நிலையில், புதிதாக வாங்கவுள்ள நிலத்திற்குண்டான தொகையை நான்கு மாத காலத்திற்குள் திரட்டுவதற்கு திருமதி.குருவம்மாள் சென்னையா நாயக்கர், திருமதி. காஞ்சனமாலா சுப்பையா நாயக்கர் ஆகியோர் தலைமையில் 6 நபர் குழு அமைக்கப்பட்டு "ஆப்ரேசன் 864" என்ற பெயரில் நிதி திரட்டும் பணியினை மேற்கொண்டனர்.
இக்குழுவினர் கடந்த மூன்று மாதங்களாக தமிழகம் முழுவதுமுள்ள சமுதாய உறவுகளை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டும், சில பகுதிகளுக்கு நேரில் சென்றும் நிதி திரட்டி வந்தனர். பார்க்கலாம் என்று வாக்களித்தவர்களில் ஒருசிலர் தவிர்த்து பெரும்பாலான உறுவுகளிடம் அவர்களால் முடிந்த உதவியையும், சில உறவுகளிடம் உரிமையுடன் சங்கம் நிரணயித்த தொகையையும் பெற்றதாக இக்குழுவினர் தெரிவித்தனர். குழுவினரின் சீரிய முயற்சியின் பலனாக ஒப்பந்தத்தில் குறித்தநாளுக்குள் போதுமான நிதியினை திரட்டி வெற்றி கண்டனர்.
இறுதிநாளன்று நிலவிய பற்றாக்குறையை சங்கத்தின் பேரில் நன்மதிப்பும், அக்கறையும் கொண்ட இருவர் தலா ரூ.100000/- (ரூபாய் ஒருலட்சம்) தங்களின் பங்களிப்பு நன்கொடை தவிர்த்து கூடுதலாக கடனுதவி செய்து "ஆப்ரேஷன் 864" வெற்றிகரமாக நிறைவேற உதவிகரமாக இருந்தனர். இதன் மூலம் சங்கத்தின் மொத்த கடன் அளவு ரூ.15 லட்சம் வரை உயர வாய்ப்பிருப்பதாக சங்கத்தின் பொருளாளர் எஸ்.ராமராஜூ மதிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கிரையம் பதிவான நாளன்று காலையில் சென்னை, செங்குன்றத்திலுள்ள ஸ்ரீராம் பவன் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில், சமுதாயத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவரும், சங்கத்தின் மூத்த ஆலோசகருமான ஆசிரியர் திரு.நல்லையா, சங்கத்தின் துணைத்தலைவர்களான திரு. நாராயணசாமி, திரு.பெருமாள், சங்கத்தின் மூத்த ஆலோசகரும், தணிக்கையாளருமான திரு.சுப்பையா, இளைஞரணி தலைவர் திரு.நல்லுசாமி, மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் திரு.சுந்தரராஜன், திரு.சுப்பிரமணியம், மண்டல பொருப்பாளர்கள் திரு.குருசாமி, திரு.செல்வராஜ், திரு.தங்கவேல் ஆகியோர் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை நிலத்தின் உரிமையாளரிடம் அளித்தனர்.
அதன் பின் செங்குன்றத்திலுள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் சமுதாய முன்னோடிகள் முன்னிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பெயரில் கிரையம் பதிவானது. இதன் மூலம் 5400 சதுர அடி நிலமும், 12000 சதுர அடி கட்டிடமும் சங்கத்திற்கு நிரந்தர சொத்தாகியுள்ளது.