அரசியலில் கம்பளத்தாரின் எதிர்காலம் எப்படி? அரை மணி நேரம் பாடம் எடுத்த அமைச்சர்!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழக முதல்வர் வாக்குறுதி அளித்தது போல் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர்களுக்கு DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களை சந்தித்து தொட்டிய நாயக்கர்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.
சென்னை, கிரீன்வேஸ் சாலையிலுள்ள அமைச்சரின் இல்லத்தில் சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மூத்த ஆலோசகர், ஆசிரியர் நல்லையா, கட்டபொம்மன் கல்வி அறக்கட்டளை தலைவரும், திமுக பிரமுகருமான மலைராஜன், சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் ராமராஜ் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து மனு அளித்தனர்.
சுமார் அரைமணி நேரம் நடந்த சந்திப்பில் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு, தற்போதைய அரசியல் சூழல், அரசியலில் கம்பளத்தார்களின் எதிர்காலம், வாரியங்கள் உள்ளிட்ட நியமனப் பதவிகளில் கம்பளத்தாருக்கான வாய்ப்புகள் குறித்து எதார்த்தமான, நடைமுறை சாத்தியமுள்ள வாய்ப்புகளை சிறப்பான எடுத்துக்காட்டுகளுடன் எளிய முறையில் பாமரனுக்கும் புரியும் வகையில் அரசியல் பாடம் நடத்தினார் மாண்புமிகு அமைச்சர்.
சென்னை, சங்கத்தின் செயல்பாடுகளை ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்துகொண்டவர், கட்டிடத்தின் புகைப்படத்தை பார்த்தவுடன் "சபாஷ்" என்று பாராட்டினார். சங்கம் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கியவர், தன்னால் முடிந்த உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தார்.
அரைமணி நேரம் சந்திப்பில் அமைச்சர் தான் ஒரு அரசியல் பல்கலைக்கழகம் என்பதை நிரூபித்தார். அமைச்சர் நேரடியாக சிலவற்றை சொல்லவில்லை என்றாலும் வருங்கால அரசியல் நகர்வுகளில் கம்பளத்தாருக்கு மட்டுமல்ல இன்று அதிகாரத்திலுள்ள பலருக்கும் வாய்ப்புகள் மங்கிவருவதை புரிந்துகொள்ள முடிகிறது. முதலில் கம்பளத்தாரிலுள்ள அரசியல்வாதிகள் நிகழ்கால அரசியலையும், எதிர்கால போக்குகளையும் புரிந்துகொண்டு, ஒருங்கிணைந்து பணியாற்றினால் தவிர உள்ளாட்சியளவில் தற்போதுள்ள பிரதிநிதித்துவத்தைக்கூட தக்கவைத்துக்கொள்வது சிரமம் என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தது.