களைகட்டும் பாஞ்சை! அணிவகுக்கும் காளைகள்!
மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் குலதெய்வமாகவும், உலகெங்கும் வாழும் கம்பளத்தார்களின் இஷ்டதெய்வமாகவும், இனத்தின் அடையாளமாகவும் விளங்கும் பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி கோவில் சித்திரைத் திருவிழா நாளை (13-ஆம் தேதி) கோலாகலமாக துவங்குகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக எளியமுறையில் நடைபெற்ற இந்த விழா, இம்முறை முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் படு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. கடந்த சில தினங்களாக இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அருள்மிகு வீரசக்கதேவி கோவில் சித்திரைத்திருவிழா குறித்து பெரிய அளவில் பிளக்ஸ் பேனர்களை பகிர்ந்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள போதிலும், மக்களிடையே ஏற்பட்டுள்ள உற்சாகப் பெருவெள்ளத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய சித்திரைத் திருவிழாவில் பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதால் பாஞ்சாலங்குறிச்சி விழாக்கோலம் பூண்டுள்ளது.
தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஜோதியை ஏந்திக்கொண்டு இளைஞர்படை புறப்பட தயாராகி வருகிறது. இதனொருபகுதியாக ஆதனூர் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் கொண்டுசெல்லப்படவுள்ள ஜோதியை த.வீ.க.பண்பாட்டுக் கழக மாவட்டத் தலைவர் வலசை V.கண்ணன் அவர்கள் துவங்கி வைக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சித்திரைத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை வீரசக்கதேவி ஆலயக்குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். விழாவில் பங்கேற்கச் செல்லும் இளைஞர்கள் மிகுந்த கட்டுப்பாட்டோடும், கண்ணியத்தோடும், பாதுகாப்போடும் பயணித்து சக்கதேவியை வழிபட்டு திரும்ப வாழ்த்துகிறோம்.