பேரறிவாளன் விடுதலை! போலி தமிழ்தேசியவாதிகளுக்கு கேள்வி?
பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு - விடுதலைக்களம் கட்சி வரவேற்பு!
உச்சநீதிமன்றம் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுவிப்பதாக நீதியரசர்கள் தீர்ப்பளித்துள்ளதின் மூலம் 31 ஆண்டுகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் விடுதலைக் களம் கட்சி நிறுவனத்தலைவர் கொ.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது :
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தற்போது ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். முன்னதாக இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கக்கோரி மாநில ஆளுநர், ஜனாதிபதி ஆகியோருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தண்டனை பெற்றோர் தொடர்ந்து நடத்திய சட்டப்போராட்டம் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
இராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் வைகோ, பழநெடுமாறன், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர்களோடு இணைந்து தொடர்ந்து போராடி வந்தது. இப்போராட்டத்தில் விடுதலைக்களம் கட்சி நிறுவனத் தலைவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இறுதியாக 2018-இல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் இணைந்து நடத்திய ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் பல்வேறு கட்சியின் தலைவர்களோடு நானும் கலந்து கொண்டேன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அரசமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்வதாக, நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதின் மூலம் விடுதலைக்களம் கட்சி நடத்திய போராட்டம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தீர்ப்பை விடுதலைக்களம் முழுமையாக வரவேற்கிறது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுவர் விடுதலையில் போலி தமிழ்தேசியவாதிகளால் தெலுங்கர்கள் என்று விமர்சிக்கப்படும் தலைவர்கள் போராட்ட களத்திலும், சட்டப்போராட்டத்திலும் செய்துள்ள பங்களிப்பிற்கு முன் போலி தமிழ்தேசியவதிகளின் பங்களிப்பு கால்தூசுக்கு சமம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.