வன்னியருக்கு மீண்டும் தனி இடஒதுக்கீடா? மீண்டும் அடிக்கும் அபாயமணி!
எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு வன்னியருக்கு 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 8/2021 சட்டத்தை நிறைவேற்றியது. இதை எதிர்த்து தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமுதாயங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அச்சட்டத்தை செல்லாததாக்கியது. உயர்நீதிமன்றம் வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசும், பாமக வும் செய்த மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இச்சட்டம் வருவதற்கு முன் வன்னியருக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்வதற்காக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கூட்டத்தை ஆணையர் டிசம்பர் 2020-இல் கூட்டியிருந்தார். இதனையறிந்த தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சீர்மரபினர் வகுப்பிலுள்ள 68 சாதிகளைச் சேர்ந்தோர் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்பொழுது போராட்டக்காரர்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவர் தணிக்காசலம், வன்னியர் இடஒதுக்கீடு குறித்து எந்த பரிந்துரையும் வழங்கவில்லை என்று கூறினார். ஆனால் அச்சட்டம் கொண்டு வரப்பட்டபொழுது ஆணையத்தின் தலைவர் பரிந்துரை செய்திருந்தது தெரியவந்தது.
இதற்கிடையே தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கூட்டம் வரும் 31-ஆம் தேதி கூடுவதாக தெரியவந்துள்ளது. இக்கூட்டத்தில் மீண்டும் வன்னியருக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்யும் மோசடி மீண்டும் அரங்கேறுமோ என்ற ஐய்யம் எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தற்போதைய ஆணையர் தணிக்காசலம் வழங்கிய பரிந்துரைக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. முன்னாள் நீதியரசரான தணிக்காசலம் உச்சநீதிமன்றம் பெயர் குறிப்பிட்டு கண்டனத்தை தெரிவித்தபோதும் இன்னும் பதவி விலகாமல் ஒட்டிக்கொண்டுள்ளது மீண்டும் ஆணையத்தின் கூட்டத்தை கூட்டியுள்ளது மோசடியை அரங்கேற்றும் சதியாக இருக்குமா என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூகநீதி கூட்டமைப்பு ஆணையர் தணிக்காசலத்தை உடனடியாக தமிழக அரசு பதவி நீக்கம் செய்ய வேண்டுமென்றும், எந்த புள்ளி விபரமும் இல்லாமல் மீண்டும் மீண்டும் மோசடி செய்யும் ஆணையத் தலைவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடர்வது குறித்து ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. சமூகநீதி பேசும் திமுக அரசு நீதிமன்றம் கோடைகால விடுமுறையில் இருக்கும்பொழுது சதி செயலுக்கு துணைபோகிறதோ என்ற ஐய்யம் எழுந்துள்ளது.