தொழில்முனைவோரை உருவாக்கிட தீவிரம்.!
நிலவுடமை சமுதாயமாக இருந்த கம்பளத்தார் சமுதாயம் புதிய பொருளாதரக்கொள்கை, தாராளமயமாக்கல் காரணமாக தொழில்துறை ஏற்பட்டுள்ள மாற்றங்கள், ரியல் எஸ்டேட் துறையின் எழுச்சி, விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை, பருவமழை குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் நிலவுடமையை வேகமாக இழந்து நாடோடி சமூகங்களாக பெருமளவு இடப்பெயர்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சமுதாயத்தின் சந்தை மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதை உடனடியாக தடுத்து நிறுத்தி வருங்கால தலைமுறையை உற்பத்திதுறையில் கவனம் செலுத்திட ஊக்குவிப்பதும், வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதும் அவசியமாகிறது.
இதற்கான முன்னெடுப்புகளை வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் துவங்கியுள்ளது. தேனி,கோவை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சங்கத்தின் பொதுச்செயலாளர் பலதரப்பினருடன் கலந்து ஆலோசித்து வருகிறார். பேக்கரி, மளிகை, சூப்பர் மார்க்கெட், ஹார்டுவேர் உள்ளிட்ட வர்த்தகத்திலுள்ள வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
உழைக்க ஆர்வமுள்ள இளைஞர்களை அடையாளம் கண்டு இரண்டாண்டுகள் அந்தந்த துறையில் பூரண பயிற்சி பெற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்ய கொள்கை அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து நிர்வாகிகள் மற்றும் ஆலோசகர்களுடன் விரிவான ஆலோசனை பெற்று இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது.
இதற்கு முன்னோட்டமாக சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், லர்த்தக அணியின் சார்பில் மளிகை கடை, அரிசிக்கடை நடத்த விரும்பும் இளைஞர்களுக்கு கோயம்பேடு மற்றும் சென்னை சுற்றுவட்டாரங்களிலுள்ள நிறுவனங்களில் இரண்டாண்டு பணியாற்றுபவர்களுக்கு, சுயதொழில் தொடங்கிட வேண்டிய உதவிகளை செய்திட தயாராக இருப்பதாக வர்த்தகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதுகுறித்தான விரிவான அறிவிப்பு ஓரிரு மாதங்களில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.