தமிழக அரசின் பாராட்டு- தமிழக முதல்வரிடம் பரிசு!- யார் இந்த அசத்தும் மருத்துவர்?
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தமிழ்நாடு காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் காசநோய் கண்டறியும் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் காச நோயாளிகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்காக கூடுதல் ஊட்டச்சத்து வழங்கி அவர்கள் விரைவில் பூரண குணமடைய உதவியாக இருந்த 100 தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட காச நோய் மையத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி, காச நோயாளிகளுக்கு சிறப்பான தொண்டும், சேவையும் ஆற்றியதற்காக திருப்பூர் குமாரானந்தபுரம் 60 அடி ரோட்டில் உள்ள திருப்பூர் நுரையீரல் மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் கே.பொம்முசாமிக்கு பாராட்டு சான்றிதழை தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
தமிழக அரசின் பாராட்டு சான்றிதழை பெற்றுக் கொண்ட டாக்டர் பொம்முசாமி பேசுகையில், காசநோயாளிகளுக்கு பல ஆண்டுகளாக தொண்டு செய்து வருவதாகவும், அர்சின் இந்த பாராட்டும் சான்றிதழும் மேலும் உற்சாகத்தை வழங்குவதாகவும், காசநேயற்ற தமிழகத்தை உருவாக்க அரசுடன் இணைந்து தொடர்ந்து பாடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.
சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் நன்கொடையாளரான மருத்துவர் பொம்முசாமி அவர்கள், சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட முதல் காணொளி மருத்துவ முகாமை துவக்கி வைத்து மருத்து ஆலோசனை வழங்கியவர் என்பதும், இந்நிகழ்ச்சிக்குப்பிறகு கோவை, ஈரோடு, நாமக்கல், கரூர், போன்ற வெளிமாவட்ட உறவுகளுக்கு நேரடி சிகிச்சையும், தொலைபேசி வாயிலாக ஆலோசனை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் பாராட்டைப்பெற்றுள்ள மருத்துவர் பொம்முசாமி அவர்கள் மேலும் பல சாதனைகளையும், விருதுகளையும் வாரிக்குவிக்க வாழ்த்துகிறோம்.