நள்ளிரவில் வீடு புகுந்து கம்பளத்தார்கள் கைது!- கரூரில் காவல்துறை அராஜகம்!
கரூரில் காவல்துறையின் அராஜகப்போக்கு!- நள்ளிரவில் கம்பளத்தார்கள் கைது!
கரூர் அருகேயுள்ள ஜல்லிவாட நாயக்கனூர் செல்லும் பகுதியில் கடந்த ஆட்சியில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்கப்பட்டது. மேலும் அங்கு புதிய பேருந்துநிலையம் அமைப்பதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. இதற்கிடையே ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில், புதிய பேருந்துநிலையம் அமைக்கும் முடிவு கைவிடப்பட்டு, இலங்கை தமிழ் எதிலிகள் முகாம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
தோரணக்கல்பட்டி, ஜல்லிவாட நாயக்கனூர், கொக்கம்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கம்பளத்தார் வசிக்கும் கிராமங்கள் அப்பகுதியில் உள்ளது. தற்பொழுது இலங்கை தமிழ் எதிலிகள் முகாம் அமைக்க திட்டமிடும் நிலத்தில், கம்பளத்தார் சமுதாயத்தினர் எருது விடும் விழா உள்ளிட்ட விழாக்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு எதிலிகள் முகாம் அமைப்பது தங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பது அப்பகுதி மக்களின் எண்ணம். ஆகவே அந்த இடத்தில் எதிலிகள் முகாம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில மாதங்களாகவே போராட்டம், ஆர்ப்பாட்டங்களில் அக்கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பிரச்சினை சில காலம் ஓய்ந்திருந்த நிலையில், அதிகாரிகள் மீண்டும் ஆய்விற்காக நேற்று வந்ததாக சொல்லப்படுகிறது. அப்பொழுது அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அதிகாரிகள் திரும்பிச்சென்ற நிலையில், இன்று அதிகாலையில் தோரணக்கல்பட்டி சென்ற போலீசார் அதிமுக முன்னாள் கவுன்சிலரும், த.வீ.க.ப.நிர்வாகியுமான ஏகாம்பரம், மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிடோரை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றதாக சொல்லப்படுகிறது.
அப்பொழுது அங்கு கூடிய பொதுமக்கள் காவல்துறையினரின் அராஜகப்போக்கை கண்டித்து அவர்கள் வந்த வாகனத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் உள்ளிட்ட சமுதாய தலைவர்கள் கணடனம் தெரிவித்துள்ளனர். நள்ளிரவில் வீடு புகுந்து தலைவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.