குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர்!
16-வது இந்தியக்குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் குடியரசு துணைத்தலைவருக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஆளும் கட்சியான பாஜக அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற அக்கட்சியின் ஆட்சிமன்றக்கூட்டத்திற்குப்பின் மேற்கு வங்க மாநிலத்தின் தற்போதைய ஆளுநர் ஜகதீப் தங்கர் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அறிவித்துள்ளார்.
71-வயதான ஜெகதீப் தங்கர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர். 1989-91 இல் ஒன்பதாவது மக்களவைக்கு முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒன்றிய இணைய அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். அதன் பிறகு ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். வழக்கறிஞர் பட்டம் பெற்றவரான ஜெகதீப் தங்கர், ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தலைவராகவும், உச்சநீதி மன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். 2019-ஆம் ஆண்டு மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டு இன்றுவரை அப்பதவியில் நீடித்து வருகிறார்.