கம்பளத்தார் கைதைக்கண்டித்து அணிதிரண்ட பெண்கள்!
கரூர் மாவட்டம் ஜல்லிவாட நாயக்கனூர் ஆட்டு மந்தை பகுதியில் உள்ள வீர சக்கதேவி கோவில் இடத்தில், தமிழக அரசு இலங்கை அகதிகள் முகாம் அமைக்க திட்டமிட்டு, அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது.
ஏற்கனவே இராயனூரில் உள்ள எதிலிகள் முகாமை, பேருந்து நிலையம் அமைக்க இருந்த இடத்திற்கு மாற்றுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது, பாதுகாப்பிற்கு அச்சுருத்தலானது என்று முகாம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த தொட்டிய நாயக்கர் சமுதாய மக்கள், விடுதலைகளம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் நிர்வாகிகள், கரூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்ததோடு, போராட்டம், உண்ணாவிரதம் போன்ற அறவழிப்போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இப்போராட்டத்தை முன்னின்று தலைமை ஏற்று நடத்தி வந்த சத்தியமூர்த்தி, ஏகாம்பரம் ஆகியோரை கடந்த 15.07.2022 அன்று அதிகாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காவல்துறையின் இந்த அராஜகப்போக்கை கண்டித்தும், கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி, ஏகாம்பரம் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் நேற்று (16.7.2022) காலை கரூரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு விடுதலைக்களம் கட்சி நிறுவனத்தலைவர் கொ.நாகராஜன் தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார்.
மேலும், இந்த கண்டன ஆர்பாட்டத்தில், விடுதலைக்களம் கட்சி, தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகம், தொட்டிய நாயக்கர் சமூக மக்கள் பெண்கள் உட்பட சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு காவல்துறையை கண்டித்து முழக்கம் எழுப்பினர்.