சங்கம் வளர்த்த மதுரையில் சங்கமிக்கும் சமுதாயங்கள்!
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தியாவில் 65 விழுக்காடு வசிக்கும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு உரிமை, கல்வி உரிமை, அரசியல் உரிமைகள் கால் பங்கு அளவில் கூட சென்றடையவில்லை. பல லட்சம் வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கும் மத்திய அரசுப்பணிகளிலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சட்டப்படி கொடுக்க வேண்டிய வாய்ப்புகள் கூட வழங்கப்படவில்லை. மத்திய ஆட்சியில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவில் இருந்தாலும், அவர்களின் வாய்ப்பு வசதிகளை பெறுக்கிக்கொள்வதில் காட்டும் அக்கறையும், கவனமும், தங்கள் சமுதாயத்தினருக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுப்பதில்லை.
அதேநிலையில் தான் தமிழகத்திலும் நிலவி வருகிறது. கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு 50 சதவீத இடங்களை உறுதி செய்துவிட்டாலும், அகில இந்திய அளவில் சமூகநீதி வென்றெடுக்கவும், மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான வாய்ப்புகளை போராடி பெருவதில் அக்கறையின்றி செயல்பட்டு வருகின்றனர். மேலும், அரசியல் ஆதாயத்திற்காக பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டில் பெருங்கொண்ட சாதிகளுக்கு சட்டவிரோதமாக இடஒதுக்கீடு வழங்கும் போக்கும் நிலவி வருகிறது.
எனவே அரசியல் கட்சிகள் தங்கள் நலனுக்காக அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத, செல்வாக்கில்லாத, போராட்ட வலிமையற்ற சாதிகளை பந்தாடுவதற்கு அரசியல் கட்சிகள் தயக்கம் காட்டாத போக்கு கடந்த சட்ட மன்றத் தேற்தலின்பொழுது வெட்ட வெளிச்சமானது. எனவே எளிய சாதிகள் இன்னும் அரசியல் கட்சிகள் நம்பி பயனில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதனடிப்படையில் 256 சமூகங்கள் இணைந்து சமூகநீதி கூட்டமைப்பு என்ற பெயரில் பெரியதொரு அமைப்பை உருவாக்கி, அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் சவால்விடும் வகையில் நீதிமன்றங்களில் வெற்றிவாகை சூடியுள்ளது.
இதை மேலும் வலுப்படுத்தி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி எல்லா சமூகங்களுக்கும் வாய்ப்புகளை வழங்கக்கோரி மதுரையில் வரும் ஆகஸ்டு 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாபெரும் மாநாட்டை நடத்தவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், பிரச்சாரங்களையும் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட சமுதாயங்கள் செய்து வருகின்றன. மதுரையில் ஒன்று கூடுவோம்! மறைக்கப்படும் உரிமைகளை வென்றெடுப்போம்!