சதுரங்க ஒலிம்பியாடு தொடக்கவிழா-களைகட்டும் தலைநகர்.
44 ஆவது சதுரங்க ஒலிம்பியாடு (44th Chess Olympiad) சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் நாளை தொடங்கி ஆகஸ்டு மாதம் 10 ஆம் தேதிவரை நடைபெறுகிறது. உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் உலக நிறுவனமான பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு இப்போட்டியை ஒருங்கிணைத்து நடத்துகிறது. உலகெங்கிலும் 186 நாடுகளிலிருந்து பல பிரபலமான கிராண்டு மாஸ்டர்கள் உட்பட சுமார் 2,000 சதுரங்க வீரர்கள் இப்போட்டிகளில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சதுரங்க ஒலிம்பியாடு போட்டிகளை நடத்துவதற்கான இடமாக இந்தியாவின் சென்னை நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன. திறவுநிலைப் போட்டிகள், பெண்களுக்கானப் போட்டிகள் என்ற இரு வகைகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
தொடக்கத்தில், சதுரங்க உலகக் கோப்பை 2019, சதுரங்க ஒலிம்பியாடு 2010 போட்டிகளை நடத்திய ரஸ்யாவின் காண்டி-மான்சிசுக்கு நகரில் இந்த நிகழ்வு நடைபெறவிருந்தது, ஆனால் பின்னர் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு இதை மாஸ்கோவிற்கு மாற்ற முடிவு செய்தது. 2022 பிப்ரவரியில் தொடங்கிய ரஸ்யா-உக்ரைன் போர்காரணமாக போட்டிகளை மாஸ்கோவிலிருந்தும் மாற்ற பிடே அனைப்பு முடிவு செய்தது. இப்போட்டியை தமிழகத்தில் நடத்துவதற்கு மிகுந்த ஆர்வம் காட்டிய தமிழக முதல்வரின் தீவிர முயற்சியால் ஒலிம்பியாடு போட்டிகளை சென்னையில் நடத்த பிடே ஒப்புக்கொண்டது.
கடந்த மார்ச் மாதம் பீடே முடிவுவெளியானதையடுத்து தமிழக அரசு ஒலிம்பியாடு போட்டியை நடத்த பிரபல செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த், அமைச்சர் மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பிரபலங்கள் அடங்கிய குழுவை அறிவித்து, ரூ.200 கோடி ரூபாயை ஒதுக்கியது. சென்னைக்கு அருகில் உள்ள மகாபலிபுரத்தில் செரட்டனின் போர் பாயிண்ட்சு ஒலிம்பியாடு மையமாக அறிவித்து பணிகளை முடுக்கிவிட்டது. செஸ் வரலாற்றில் முதல்முறையாக 190 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களை வரவேற்கும் பாடலை பிரபல இசை அமைப்பாளர் A.R.ரஹுமான் உருவாக்கியது கடந்த வாரம் வெளியானது.
நாளை தொடங்க இருக்கும் ஒலிம்பியாடு போட்டிக்கான தொடக்க விழா நேரு உள்விளையாட்டரங்கில் பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைக்கவுள்ளார். இப்போட்டிக்கான விளம்பரங்கள் சென்னை மாநாகரின் முக்கிய பாலங்கள், மெட்ரோ ரெயில் நிலையம், பேருந்து நிறுத்தங்களில் பிரமாண்ட அளவில் செய்துள்ளனர். ஒலிம்பியாடு போட்டி நாளை தொடங்குவதையொட்டி சென்னையிலுள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.