சரித்திரம் போற்றும் சாதனைப்பட்டியலில் இணைகிறார் தமிழக முதல்வர்!
நாட்டிலேயே முதன்முறையாக பள்ளிக்கூடத்தில் உணவு வழங்கியவர் திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சியின் தலைவர் வெள்ளுடை வேந்தர் சர்.பி.டி.தியாகராயர்.
இதை தமிழ்நாடு முழுவதும் பரவலாக அனைத்து அரசு பள்ளிகளிலும் மதிய உணவு திட்டமாக கொண்டு வந்தவர் கர்மவீரர் காமராசர்.
மதிய உணவை சத்துணவாக வழங்கியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
ஐந்து நாட்களும் முட்டை சேர்த்து வழங்கி சத்துணவை வலுப்படுத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
தினமும் ஒரே விதமான உணவு வழங்காமல் நாளுக்கொரு உணவு என அட்டவணையிட்டு மேம்படுத்தியவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா.
இந்த வரிசையில் இணைகின்றார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 1,545 அரசுப்பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் கடந்த புதன்கிழமை (27.07.2022) தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏதும் அற்றவர்களுக்கு சமூக நீதி, சம உரிமை, கல்வி மூலம் எல்லாமும் கொடுக்க வேண்டும் என்னும் திராவிட இயக்க கொள்கைகளினால் மற்ற மாநிலங்களை காட்டிலும் கல்வியில் பல மடங்கு முன்னேறி உள்ள தமிழ் நாட்டில் இது ஒரு மைல்கல். இந்தியாவிற்கு தமிழ்நாடு எப்பொழுதும் முன்னோடி என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. தொடரட்டும் தமிழக முதல்வரின் தொலைநோக்கு திட்டங்கள்.