சமூகநீதி மாநாட்டிற்கு 4.5 லட்சம் கம்பளத்தாரின் பங்களிப்பு!
தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 261 சமூகங்களின் "சமூகநீதி கூட்டமைப்பு" சார்பில் மதுரையில் நடைபெற்ற சமூகநீதி மாநாடு எதிர்பார்த்ததைவிட சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அரசியல் கட்சிகள், பத்திரிக்கைகளின் கவனத்தை ஈர்த்த சமூகநீதி மாநாட்டிற்கு மக்கள் அளித்த ஆதரவை புரிந்து கொண்ட நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் அடுத்த சில நாட்களிலேயே "சாதிவாரி கணக்கெடுப்பு" நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டில் தொட்டிய நாயக்கர் சமூகம் பெரிய அளவில் பங்களிப்பு செய்துள்ளது. மாநாட்டிற்கான சுவர் விளம்பரம், நோட்டீஸ் விநியோகம், வாகன பிரச்சாரம், மாநாட்டு விளக்க கருத்தரங்கம், மாநாட்டு மலர் தயாரிப்பு, மாநாட்டு நிதி பங்களிப்பு, மாநாட்டு ஏற்பாடுகள் என அனைத்துவிதமான பணிகளிலும் தன் பங்களிப்பை செவ்வனே செய்துமுடித்துள்ளது.
இம்மாநாட்டிற்காக தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் 4.45 லட்சம் பொதுமக்களிடமிருந்து திரட்டி வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டு வரவு செலவை கையாண்ட நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி வெளியிட்டுள்ள பட்டியல் படி மாநாட்டு நிதியாக கம்பளத்தார் சார்பில் தனியாக ஒரு லட்சமும், மாநாட்டு மலருக்காக ரூபாய் 2.71 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுதவி, மாநாட்டில் இரண்டாயிரத்து ஐநூறுக்கு மேற்பட்டோர் தங்கள் சொந்தக்காசை செலவு செய்து 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகநீதி மாநாட்டிற்கு நிதியளித்த அனைத்து கம்பளத்து உறவுகளுக்கும், விளம்பர உதவி செய்தமைக்கும், பங்கெடுத்துக்கொண்ட அமைப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை ஒருங்கிணைப்புக்குழு சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.