சுங்கச்சாவடி கொள்ளைக்கு போட்டியாக கூரியர், லாரி வாடகை உயர்வு!
தமிழகத்திலுள்ள நெடுஞ்சாலைகளில் 50 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் வருடந்தோறும் 22 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் முதல் தேதி அன்றும், மீதமுள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதம் முதல் தேதியும் வழக்கமாக கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, அதன்படி, திருச்சி சமயபுரம், திருப்பராய்த்துறை, பொன்னம்பலபட்டி, கரூர், வேலஞ்செடியூர்,தஞ்சை வாழவந்தான் கோட்டை, விருதுநகர், புதூர் பாண்டியபுரம், மதுரை, நாமக்கல் ராசம்பாளையம், சேலம், ஓமலூர், நத்தக்கரை, வைகுண்டம், வீரசோழபுரம், மேட்டுப்பட்டி, திண்டுக்கல் கொடைரோடு, தருமபுரி பாளையம், குமாரபாளையம், விஜயமங்கலம், விக்கிரவாண்டி, மொரட்டாண்டி, உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு அமலானது.
இக்கட்டண உயர்வின்படி கார், வேன், ஜீப் ஆகிய வாகனங்களுக்கு ஒருவழி கட்டணமாக 90 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், 10 ரூபாய் உயர்த்தப்பட்டு, 100 ரூபாயாகியுள்ளது. பலமுறை பயணம் செய்ய 135 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இனி 150 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்வகை வாகனங்களுக்கு மாதாந்திர கட்டணம் இரண்டாயிரத்து 660 ரூபாயில் இருந்து, மூவாயிரத்து 45 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இலகு ரக வாகனங்களுக்கு ஒரு வழி கட்டணம் 180 ரூபாயாகவும், பலமுறை பயணம் செய்ய 265 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம் ஐந்தாயிரத்து 330 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்துகளுக்கு ஒருவழி கட்டணம் 355 ரூபாயாகவும், பலமுறை பயணம் செய்ய 535 ரூபாயாகவும் சுங்கக் கட்டணம் அதிகரிக்கிறது. மாதாந்திர கட்டணம் 10 ஆயிரத்து 665 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பல அச்சு வாகனங்களுக்கு ஒரு வழிக்கட்டணம் 570 ரூபாயாகவும், பலமுறை பயணம் செய்ய 855 ரூபாயாகவும், மாதாந்திர கட்டணம் 17 ஆயிரத்து 140 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுங்கக்கட்டண உயர்வுக்கு போட்டியாக கூரியர் நிறுவனங்களும் கட்டண உயர்வை அறிவித்துள்ளன. அதன்படி, 10 கிலோ எடை கொண்ட பார்சலுக்கான கட்டணம், 400 கி.மீ., தூரம் வரை, 150 ரூபாயாக இருந்தது, 170 ரூபாயாகவும், 600 கி.மீ., தூரம் வரை, 170 ரூபாயாக இருந்தது, 200 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த எடைக்கு மேல், 100 கிலோ வரையில், 50 ரூபாய் முதல், 150 வரையும், 100 கிலோவுக்கு, மேல், ஒரு டன் வரையில், 300 ரூபாய் முதல், தூரத்தின் அடிப்படையில், 800 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, உள்ளூர் கவருக்கு, 10 ரூபாயும், வெளியூர் பார்சலுக்கு, 15 ரூபாய், வெளி மாநில பார்சலுக்கு, 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
சுங்கக்கட்டண உயர்வை அடுத்து லாரி உரிமையாளர் சங்கமும் வாடகையை உயர்த்தப்போவதாகவும், இதற்கான ஆலோசனை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்ரு அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் தங்க நாற்கர சாலை திட்டத்தின்படி அமைக்கப்பட்ட தேசியநெடுஞ்சாலை கடந்த இருபது ஆண்டுகளாக மக்களை சுரண்டி கொளுத்து வருவது, பொதுமக்களுக்கு பெரும்துன்பமாக மாறியுள்ளது. ஒப்பந்த காலத்தையும் தாண்டி பொதுமக்களை சுரண்டும் சுங்கச்சாவடிகளுக்கு எதிரான நீடித்த போராட்டத்திற்கு தேசம் தயாராவது விரைவில் நடக்கும்.