பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான மத்திய அரசின் சதியை முறியடிக்கோரி ஆட்சியரிடம் மனு!
சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட, அதிகாரத்திற்கு வர வாய்ப்பே இல்லாத, பலநூற்றாண்டுகளாக முன்னேற்றம் காணமுடியாத, கடும் சுரண்டலுக்கு ஆளான, பல்வேறு நிலைகளில் சமூகத்தில் மிகவும் பின்தங்கியுள்ள கோடிக்கணக்கான மக்கள் அடிமைநிலையிலிருந்து முன்னேற வேண்டி இடஒதுக்கீட்டிற்காக பல உயிர் தியாகங்களையும், போராட்டங்களையும் ஆண்டாண்டுகாலமாக செய்தும் கண்டுகொள்ளாத இந்திய ஒன்றிய அரசு, அரசின் அனைத்து உயர் பதிவிகளிலும், அதிகாரமட்டங்களிலும் 90 விழுக்காடுக்கு மேல் கைக்குள் வைத்திருக்கும் உயர்சாதியினருக்கு ஆதரவாக, இடஒதுக்கீடு வேண்டி எந்த ஒரு போராட்டமோ, ஆர்ப்பட்டமோ, தியாகமோ செய்யாத வகுப்பினருக்கு ஆதரவாக வலிந்து கொண்டுபோய் 10 விழுக்காடு இடஒதுக்கீடை தங்கத்தட்டில் வைத்து வழங்கியுள்ளது. 70 சதவீதம் வாழும் இதர பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடை முழுமையாக செயல்படுத்தாத மத்திய அரசு, 90 விழுக்காடு பணியிடங்களை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள 4 சதவீதமே உள்ள உயர்சாதியினருக்கு அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி, நாட்டிலுள்ள 95 விழுக்காடு மக்களை வஞ்சித்து வருகிறது.
ஏற்கனவே நீதிமன்றமும், அதற்கென நியமிக்கப்பட்ட ஆணையமும் உயர்சாதிக்கான இடஒதுக்கீட்டை நிராகரித்தும்கூட, அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மோசடியாக நிறைவேற்றியுள்ளது மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரிக்கக்கூட முன்வராத உச்சநீதிமன்றம், கடும் விமர்சனத்திற்கும், நெருக்கடிக்குப்பிறகு அரசியல் சாசன அமர்வை அமைத்து இன்று முதல் விசாரிக்க உள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் அறியாமையை பயன்படுத்தி, நவீன அடிமைகளாக இதர பிற்படுத்தப்பட்ட மக்களை ஆக்கிடும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் நேற்று தேனி, திண்டுக்கல். மதுரை, கரூர், ஓசூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சமூகநீதி கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.