சீன அதிபரையும் விட்டு வைக்காத புரளி!
மனிதன் உள்ளிட்ட உயிரனங்கள் எழுப்பும் ஓசைக்கு அடிப்படையாக இருப்பது காற்று. கம்பி வடங்கள் மற்றும் சேட்டிலைட் மூலம் ஒலி கடத்தப்பட்டு தூரதேசங்களில் உள்ளவர்களோடும், ஏன் விண்வெளியில் உள்ளவர்களோடும் பேசமுடிகிறது. காற்றின் வேகத்திற்கும் ஒளியின் வேகத்திற்கு ஓப்பீடு செய்யமுடியாத அளவில் வித்தியாசம் உண்டு. ஆனால் இந்த பிரபஞ்சத்தில் ஒளியைவிட வேகமாக செல்லக்கூடியது வதந்தி, புரளி, கிசுகிசுக்கள். அதை மீண்டும் ஒருமுறை சீன அதிபர் விசயத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பொதுவாகவே கம்யூனிச நாடுகளில் நடப்பது உடனுக்குடன் வெளியுலகிற்கு தெரிவதில்லை. இதனால் இவற்றை இரும்புத்திரை நாடுகள் என்று சொல்வதுண்டு. அப்படிப்பட்ட இரும்புத்திரை நாடுகளில் ஒன்றான சீனாவில், அந்நாட்டு அதிபர் குறித்து சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக பரப்பட்ட செய்தி வெறும் புரளி என்று தெரியவந்துள்ளது
சீன நாட்டின் அதிபராகவும், சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவர் பதவியிலும் இருப்பவர் ஜி ஜின்பிங். 2013 முதல் அந்நாட்டின் அதிபராக இருப்பவர். ஏற்கனவே இருமுறை அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர், மீண்டும் மூன்றாவது முறையாக அதிபராவதற்கு வழிவகை செய்யும் வகையில் அந்நாட்டு சட்டம் திருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் நாட்டில் சாமர்கண்ட் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். இக்கூட்டத்தை முடித்து நாடு திரும்பியவர் இதுவரை பொதுநிகழ்ச்சிகள் எதிலும் தட்டுப்படவில்லை.
இதனால் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத் தலைவர் பதவியில் இருந்தும், அதிபர் பதவியில் இருந்தும் ஜி ஜிங்பிங் நீக்கப்பட்டு, அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி காட்டுத்தீயாய் பரவியது. எரிகின்ற தீக்கு எண்ணெய் வார்ப்பதுபோல் சீனமக்கள் பலரும் அதிபர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்தியை பரப்பினர்.
ஆனால் இதற்கு எதுவும் பதிலளிக்காமல் மௌனமாகவே சீன அரசு இருந்து வந்தது. வடகொரிய அதிபர் குறித்தும் இதுபோன்ற செய்திகள் ஆறுமாதத்திற்கு ஒருமுறையாவது இப்படியான போலி செய்திகள் கொடிகட்டி பறக்கும். அதற்கு அந்நாடு ஒருபோதும் பதிலளிக்காது. அதுபோலவே சீன அரசும் எந்தவிதமான பதிலும் தெரிவிக்காமல் கண்டும் காணாமல் விட்டுவிட்டது.
எதிர்பார்த்ததுபோலவே இரண்டு, மூன்று தினங்கள் பரபரப்பாக பேசப்பட்ட விவகாரம் தற்பொழுது தானாகவே முடிவை நோக்கி நகர்ந்துள்ளது. சர்வதேச அளவில் பரவிய வதந்தி இரண்டு நாட்கள் கூட தாக்குப்பிடிக்கமுடியாமல். புலனாய்வு செய்து தானாகவே முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி சீன அதிபர் பதிவியில் இருந்தோ, கட்சிப்பொறுப்பிலிருந்தோ நீக்கப்படவில்லை என்ற செய்தியை வெளியிட்டு வருகின்றன. இதற்கு சீன அரசு எந்த பதிலையும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.