சென்னையில் பிரமாண்டமான முறையில் முப்பெரும் விழா!
சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் சென்னையில் மிகபிரமாண்டமான முப்பெரும்விழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 264-வது பிறந்தநாளை முப்பெரும் விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் 2023 ஜனவரி 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, தலைநகர் சென்னையில் உள் அரங்கில் நடைபெறும் இவ்விழாவானது, மாவீரனின் 264-வது பிறந்தநாள் விழா, அரசியல் மலர் வெளியீடு, இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் கட்டிட திறப்பு ஆகிய மூன்று நிகழ்வுகளை முன்னிறுத்தி பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படவுள்ளது.
சுமார் 20 மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வருடங்களாக வசிக்கும், பல லட்சக்கணக்கான மக்களைக் கொண்ட இராஜகம்பளத்தார் சமுதாயத்தில், அரசியல் என்பது ரத்தத்தில் ஊறியது. கம்பளத்தார் வசிக்கும் கிராமங்கள் தோறும் கட்சிகளில் நிர்வாகிகள் இல்லாத இடமே இல்லை என்று உறுதியாக சொல்லுமளவில் ஏதாவது ஒரு கட்சியில் இல்லாமல் இல்லை. அதிகாரம் என்பது கம்பளத்தாரின் மரபணுவிலேயே உள்ளது. ஆனால் ஜனநாயகத்திற்கேற்ப உச்சம் பெறாமல் நீண்டகாலமாக ஒரு தேக்கநிலையில் உள்ளது. சமீபகாலமாக புதிய இளைஞர்கள் பல்வேறு கட்சிகளில் பொறுப்புகளை பெறுவதும், கிராமப்புற, நகர்புற உள்ளாட்சிகளில் வெற்றிவாகை சூடி பொறுப்பேற்றுள்ளதும், போட்டி மிகுந்த பெரிய கட்சிகளில் ஒன்றிய, மாவட்ட அளவிலான பொறுப்புகளைப் பெற்று முன்னேற முனைந்து வருகின்றனர். அவர்களின் வளர்ச்சியை துரிதப்படுத்தவும், சமூகத்தை அவர்களின் பின்னால் அடையாளப்படுத்தவும், உட்சபட்ச அதிகாரமட்டங்களில் கம்பளத்தாரின் தனித்துவத்தை உணர்த்தி, அதிகாரப்பகிர்வை நோக்கி நகர்த்தும் வகையில், நமது அரசியல் தலைவர்களை மையப்படுத்தி "அரசியல் மலர்" வெளியிட இந்த விழாவினை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கட்டபொம்மனாரின் பிறந்தநாளோடு, சென்னையில் கட்டப்பட்டுள்ள மூன்றடுக்கு மாளிகையை சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கும் நிகழ்வும் இணைந்து நடத்தப்படவுள்ளது.
இவ்விழாவில் மத்திய,மாநில அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகர மேயர்கள் மற்றும் தோழமை சகோதர அமைப்புகளின் தலைவர்களையும் பங்கேற்கச் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த முப்பெரும் விழாவினை சிறப்பாகவும், அரசியல் கட்சிகளின் கவனத்தைப் பெறும் வகையில் நடத்திட அனுபவம் வாய்ந்த தலைவர்களை உள்ளடக்கிய விழா குழு அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.