50 ரூபாயில் சென்னையை சுற்றலாம் வாங்க!- சென்னை மெட்ரோவின் அதிரடி ஆபர்!
பல்லாயிரம் கோடி செலவில் நாட்டிலுள்ள முக்கிய தலைநகரங்கள் மற்றும் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருபது ஆண்டுகளுக்கு முன்னரே வந்திருக்க வேண்டிய மெட்ரோ ரயில் திட்டம் 2015-வாக்கில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. பயணிகளுக்கு மிகவும் பயனுள்ள, எளிமையான போக்குவரத்து வசிதியாக அமைந்துள்ள மெட்ரோ ரயில் சேவை, தற்போது இரண்டு வழித்தடங்களில் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் மூண்று வழித்தடங்களில் இயக்குவதற்கான பணிகள் சுமார் 62 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வேகமாக நடைபெற்று வருகின்றது. முதலாம் கட்டப்பணிகளில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல், கால தாமதம் போன்றில்லாமல் இரண்டாம் கட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருவதை காணமுடிகிறது. இரண்டாம் கட்டப்பணிகள் நடைபெறும் வழித்தடங்களில் திடீர் திடீரென சாலைகளில் முளைக்கும் கான்கிரீட் பில்லர்கள், அந்த சாலை மற்றும் அப்பகுதிகளின் அமைப்பையும், முக்கியத்துவத்தையும் மாற்றிவிடுகிறது.
மெட்ரோ இரயில்சேவையின் இந்த தாக்கம் சென்னையில் மட்டுமல்ல அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து இடங்களிலும் இதுதான் நிலை. அதேபோல் பயணிகள் போக்கு வரத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள மெட்ரோ ரயில் சேவையை பயண்படுத்துவோ எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையிலும், சாலை நெரிசலை குறைத்து, காற்றுமாசை கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது மெட்ரோ நிர்வாகம். அதன்படி, இனி ரூபாய் 50 ரூபாய் டிக்கெட்டில் ஒருநாளில் எத்தனைமுறை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்ற சூப்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது சென்னை மெட்ரோ நிர்வாகம். அதன்படி பயணிகள் பயணத்தை தொடங்கும் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரூபாய் 100 கட்டணம் செலுத்தி நாள்தோறும் பயணத்திற்கான டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் .
ஒவ்வொரு நாளும் காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எந்த மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் சென்று வரலாம். கடைசி பயணத்தை முடிக்கும் மெட்ரோ ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் பயண அட்டையை திருப்பிக் கொடுத்துவிட்டு ரூபாய் 50 திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இந்த பயண சலுகை அட்டையை வாங்கியவர்களே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் யாரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதுபோன்று ரூ.2500 செலுத்தி மாதாந்திர பயண சலுகை கட்டணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதனுடன் ரூபாய் 50 பயண அட்டைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். இதுவும் மாத முடிவில் திரும்பி வழங்கப்படும், பயண சலுகை கட்டணத்தில் விருப்பம்போல் பயணம் செய்யலாம். மேற்கண்ட பயண சேவையில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், மாணவர்கள் பெரிய வர்த்தக நிறுவனங்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறினர். சென்னையில் 2 வழித்தடங்களில் 55 கிலோ மீட்டர் தூரத்திற்கு 42 தடவைகள் நாள்தோறும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஐந்து நிமிட இடைவெளியிலும் மற்ற சாதாரண நேரங்களில் பத்து நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை மெட்ரோ ரயில்களில் செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 61.12 லட்சம் பேர் பயணித்த நிலையில், கடந்த 30-ம் தேதி மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 46 ஆயிரத்து 404 பேர் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இரண்டு வழித்தடங்களில் மட்டுமே இயங்கி வரும்நிலையில் இரண்டாவது கட்டமாக நடைபெற்று வரும் பணிகள் நிறைவடைகையில் கூடுதலாக மூன்று வழித்தடங்கள் இணையும்பொழுது, பயணிகள் எண்ணிக்கை கோடிகளில் உயரும்.