தமிழக அரசியலை உலுக்கும் “இராஜகம்பளத்தாரின் உரிமைக்குரல்”
https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/viruthunagar-admk
நேற்று (09.05.2020) நக்கீரன் இணைய இதழில் வெளியான கட்டுரை ஒன்றில், அண்ணனுக்கு ஒரு “மாவட்ட செயலாளர் பதவி” பார்சல்! – இராஜகம்பளத்தாரின் உரிமைக்குரல்! என்ற தலைப்பில், அஇஅதிமுக வில் காலியாக உள்ள விருதுநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு, சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் மற்றும் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் அதிமுக கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் அடிப்படையில், மேற்கண்ட தலைப்பில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. (கட்டுரையை முழுமையாக வாசிக்க மேலே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்).
அந்தக் கட்டுரையில் தமிழக முதல்வர் மற்றும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருக்கு, சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் அனுப்பிய கடிதத்தையும் வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையில் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில், விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவி கம்பளத்தாருக்கு வழங்க வேண்டிய அவசியம், தேவை குறித்து வரிக்கு வரி அக்கடிதத்தை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ளது. இராஜகம்பளத்தாரின் வேண்டுகோளை முக்கியச்செய்தியாக்கி அரசியல் கட்சிகளின் பார்வைக்கு கொண்டு சென்ற நக்கீரனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேவேளையில், இரண்டு அமைப்புகளின் கடிதத்தையும் இணைத்து அதன் சாராம்சத்தை வெளியிட்டுள்ள இக்கட்டுரையில், ஏறக்குறைய 99 சதவீதமான பகுதி நலச்சங்கத்தின் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்பட்டிருந்தது. நலச்சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட கடிதத்தில் யாரையும் பெயர் குறிப்பிட்டுச் சொல்லாமல், அக்கட்சில் பணியாற்றும் தகுதியானவர்களுக்கு வழங்கும்படியே கோரியிருந்தது. ஆனால் டாக்டர்.சி.எம்.கே.ரெட்டி அவர்களின் தலைமையில் இயங்கும் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் வழங்கப்பட்ட கடிதத்தில், இராஜ கம்பளத்தார் சமூகத்தைச் சேர்ந்த திரு.பி.வி.இராதாகிருஷ்ணன் அவர்களின் பெயரைக் குறிப்பிட்டே எழுதப்பட்டிருந்தது.
நக்கீரன் வெளியிட்ட கட்டுரையில் சுட்டிக்காட்டிய சாராம்சத்தின் பெரும்பகுதி நலச்சங்கத்தின் கடித அடிப்படையில் இருந்த காரணத்தால், நலச்சங்கமே குறிப்பிட்ட நபருக்கு பரிந்துரை செய்ததுபோல் கட்டுரையை படிப்பவர்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. நலச்சங்கம் எந்த ஒரு குறிப்பிட்டவர்களின் பெயரையும் பரிந்துரைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் அதேவேளையில், திரு.பி.வி.இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கட்சித் தலைமை வழங்கினாலும் நலச்சங்கத்திற்கு பரிபூரண திருப்தியே என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
எது எப்படியோ,இராஜகம்பளத்தாரின் கோரிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி, வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது. இராஜகம்பளத்து அரசியல் பிரமுகர்களுக்கு வரும்காலம் வசந்தமாக அமைய வாழ்த்தும் வேளையில், அரசியலில் உள்ளவர்கள் தங்கள் தகுதிகளை வளர்த்திக்கொள்ள முன்வர வேண்டும் என்பதையும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம்.