சத்தியமங்கலம் சாத்தியப்படுத்தியது!
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் ஜனவரி 29-இல் நடைபெற இருக்கும் முப்பெரும்விழா குறித்தான விளக்கக்கூட்டம் சத்தியமங்கலத்தில் நேற்று (25.11.2022) காலை நடைபெற்றது.
ஒன்றியக்குழு உறுப்பினரும், திமுக மூத்த முன்னோடியுமான சின்னுச்சாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாரனூர் பவுல்ராஜ் வரவேற்புரை ஆற்றினார்.
முப்பெரும்விழா குறித்து விளக்க உரையாற்றிய வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர், குறுகிய கால இடைவெளியில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று, கட்சிகளை மறந்து சமுதாயத்திற்காக ஒன்றுதிரண்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். எந்தவொரு வட்டாரத்தை எடுத்துக்கொண்டாலும் பல்வேறு கட்சித்தலைவர்கள் ஓரிடத்தில் கூடியது இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் மீதான மக்களின் மதிப்பையும், நம்பிக்கையையும் காட்டுவதாக இருந்தது.மக்கள் வைத்துள்ள இந்த நம்பிக்கையை காக்கும் பெரும் பொறுப்பு சங்கத்திற்கு இருப்பதாகவும், சமுதாயம் இன்னும் பல்வேறு தளங்களில் ஒன்றிணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த முன்னேற்றத்தைக்காண சங்கம் பாடுபடும் என்று உறுதியளித்தார். கம்பளத்தாரின் தனித்துவத்தையும், ஆளுமையையும் பொதுச்சமூகத்திற்கும், அரசியல் தலைமைகளுக்கு உணர்த்த வேண்டிய அவசியான சூழலில் இந்தவிழாவினை சமுதாய நலச்சங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் அதற்கு சமுதாய மக்களும், தலைவர்களும் ஆதரவு தரவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் பேசிய மு.ஊ.ம.தலைவர் திருமூர்த்தி அவர்கள், இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் முன்னெடுத்துள்ள இம்முயற்சியை பாராட்டுவதாகவும், அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்வதோடு, பெருமளவில் விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
திமுக இளைஞரணி நிர்வாகி விஜயகுமார் பேசுகையில், கடந்த நான்கைந்து வருடங்களாக சமுதாய நலச்சங்கத்தோடு தொடர்பில் இருப்பதாகவும், தொடர்ந்து காலத்திற்கு ஏற்ப தேவையான விசயங்களை முன்னெடுத்து வருவதை கவனித்து வருவதாகவும், தற்போதைய சூழலில் இந்த விழா சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
சத்தி மு.கவுன்சிலர் பொன்னுதுரை பேசுகையில் முந்தைய காலத்தில் பிற சமுதாயங்கள் கட்டமைக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டு இன்று அதிகாரங்களில் கோலோச்சுவதை உதாரணமாகக் கொண்டு நாமும் அதற்கான திட்டங்களை வகுத்து சமூகத்தை மேம்படுத்த பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இறுதியாக ஊ.ம.துணைத்தலைவர் சிவக்குமார் நன்றி உரையாற்றினார்.