முப்பெரும்விழா அமைச்சரின் உதவியாளர் ஆனந்தக்கண்ணீர்!
வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (29.01.2023) கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும்விழாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இந்த முப்பெரும்விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய வருவாய்த்துறை அமைச்சர் மாண்புமிகு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அரசியல் உதவியாளர் திரு.மகேஷ், முப்பெரும்விழா மேடையில் தனது வாழ்த்துரையை வழங்க தயாராக இருந்தநிலையில், மிகமுக்கிய தொலைபேசி அழைப்பு வந்துவிட்ட படியால் வணக்கம், நன்றி மட்டும் கூறி முடித்துக்கொண்டார்.
முப்பெரும்விழாவில் பேசுவதற்காக தனி குறிப்போடு வந்தவருக்கு,தொலைபேசியில் வந்த செய்தியை அமைச்சருக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டி வந்ததால் வருத்தத்தோடு முடித்துக்கொண்டவர், நிகழ்ச்சி முடிந்து அடுத்தநாள் காலை நலச்சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். திடீரென வந்த தொலைபேசி அழைப்பால் தனது சந்தோசத்தை மேடையில் பகிரமுடியவில்லை என்றவர், அமைச்சரின் உதயாளராக கால்நூற்றாண்டுகால பயணத்தில், பல அரசியல் மேடைகள், சாதிய அமைப்புகளின் மேடையை பார்த்துள்ளேன். ஆனால் முப்பெரும்விழா மேடை, நிகழ்ச்சி அமைப்பு, பங்கேற்பாளர்களின் அமைதி என ஒவ்வொரு விசயத்திலும் இருந்த நேர்த்தி என் கண்களில் ஆனந்தக்கண்ணீரை வரவழைத்து விட்டதாக தெரித்தார். இதுபோன்ற நிகழ்ழ்சியை நடத்தவேண்டுமென்ற ஆசை கடந்த பத்தாண்டுகாலமாக எனக்கொரு ஆசை இருந்துவந்ததாகவும், அது இந்த விழாவின் மூலம் நிறைவு பெற்றுள்ளதாகவும், நான் நடத்தியிருந்தாலும் இதுபோல் நடத்தியிருக்கமுடியாது என்று தன்னையும் தாழ்த்தி நிகழ்வை பாராட்டினார்.
முன்னதாக, அமைச்சரின் உதவியாளர் திரு.மகேஷ் அவர்களோடு சங்க நிர்வாகிகளுக்கு நேரடியாக தொடர்போ அறிமுகமோ இல்லாத நிலையில், முப்பெரும்விழாவிற்கான அழைப்பிதழை சங்கத்தின் சார்பில் நேரடியாகவோ, தொலைபேசி வாயிலாகவோ அனுப்பிவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும் சமுதாயத்தின் மீதான அக்கறையாலும், அன்பாலும் தானாக முன்வந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோடு, ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த அமைச்சரை முப்பெரும்விழாவில் கலந்துகொள்ளச் செய்வதற்காக கடும் முயற்சி எடுத்துக்கொண்டார். மேலும் நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்ததோடு முப்பெரும்விழா நிதியாக ரூ.பத்தாயிரத்து ஒன்று நன்கொடை வழங்கினார்.