அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோருடன் சமுதாய தலைவர்கள் சந்திப்பு!
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களை நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளையினர் சந்தித்துப்பேசினர். இதுகுறித்து அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி நடைபெற்ற முப்பெரும் விழாவில், சிறப்பு விருந்தினர்களாக தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டபடியால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மூத்த அமைச்சர்களான கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்ட பலர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். முப்பெரும்விழா அறிவிக்கப்பட்டிருந்த தேதியில் வேட்புமனு தாக்கல், பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட பல பணிகளை ஒருங்கிணைக்க வேண்டியிருந்தபடியால் அமைச்சர் கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோர் முப்பெரும்விழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டுள்ள கே.என்.நேரு, எ.வ.வேலு ஆகியோரை நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை சார்பில் தலைவர் மு.பழனிச்சாமி, மூத்த வழக்கறிஞர் பழனிச்சாமி, அமைப்புச்செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் சந்தித்து பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.