தமிழக அரசின் உத்தரவுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
எம்.பி.சி உள்ஒதுக்கீடு பற்றி 3 மாதங்களில் அறிக்கை தர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதற்கு தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 260 சாதிகளை உள்ளடக்கிய சமூகநீதி கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் விபரம் வருமாறு,
உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அறிவுறுத்தப்பட்டவாறு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் உள்ள சமூகங்களின் உள் இடஒதுக்கீட்டு கோரிக்கை குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை மாற்றியமைத்து தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கடந்த நவம்பர் 17-ஆம் தேதி ஆணை பிறப்பித்திருந்தது. அந்த ஆணையத்திற்கு மொத்தம் 6 ஆய்வு வரம்புகளை தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்திருந்தது. இப்போது கூடுதலாக ஓர் ஆய்வு வரம்பை சேர்த்து அரசு ஆணை (அரசு ஆணை எண்: 06/12.1.2023) பிறப்பித்திருக்கிறது.
உச்சநீதிமன்றம் கடந்த 31.03.2022-ஆம் நாள் சி.ஏ. 2600/2022 என்ற எண் கொண்ட வழக்கில் அளித்த தீர்ப்புரையின் 68 மற்றும் 73 பத்திகளில் தெரிவித்திருக்கும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் உள் ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என்று ஆணையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூகநீதி கூட்டமைப்பு, உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு இல்லை என்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை கலந்தாலோசிக்காமல் தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் கூறியுள்ளது. மேலும் மாநில அரசு இன்னும் காலம் கடத்தாமல் உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.