நீட் தேர்வில் மாற்றம் தேவை! தேவைப்பட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும்! தலைமை நீதிபதி
மருத்துவக் கல்வி கொள்கையில் மாற்றம் தேவை என்பதற்கான அடையாளமாக நீட் தேர்வு வழக்குகள் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கூறியுள்ளார். டெல்லியில் இயங்கிவரும் கங்கா ராம் நினைவு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் நீட் தேர்வு வழக்குகள் குறித்து கூறியதாவது:-
நீட் தேர்வு குறித்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் அதிக அளவில் நிலுவையில் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையே மருத்துவக் கல்வி கொள்கையில் மாற்றம் தேவை என்பதை உணர்த்துகிறது. நீட் தேர்வு குறித்து நிலுவையில் உள்ள வழக்குகள் மருத்துவக் கல்வி கொள்கையில் மாற்றன் தேவை என்பதற்கான அடையாளம்.
நீதிமன்றங்கள், மத்திய அரசின் கொள்கை சார்ந்த விஷயங்களில் அவப்போது தலையிட முடியாது. இருந்த போதிலும், மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதுடன் பரிசீலனை செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை. ஒருவேளை மாணவர்களின் நலனுக்கு எதிராக ஏதேனும் இருந்தால் அதில் தலையிட வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார்.
முன்னதாக முந்தைய அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட நீட் தேர்வு கட்டாயம் என்ற இந்திய மருத்துவ கவுன்சிலின் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட முந்தைய ரிட் மனுவை தமிழக அரசு கடந்த வாரம் திரும்பப் பெற்றுக்கொண்டு புதிய மனுவை (ஒரிஜினல் சூட்) தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு அரசின் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாடுகளை உள்ளடக்கியும், ஒன்றிய அரசின் பாதகமான சட்டவிதிகளை எதிர்த்தும் உரியவாறு புதிய வழக்கு தொடர்ந்தும் உரிய மனுக்கள் (Original Suit) இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிமுக அரசின் தவறான வழக்கினை திரும்ப பெற்று, புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
நீட் தேர்வை எதிர்த்த பல்வேறு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவந்த நிலையில், தற்போது தலைமை நீதிபதியின் கருத்து நீட் எதிர்பாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியிருப்பதாக பார்க்கப்படுகிறது.