அறிவுலகின் ஆயுதம் ஐஐடி மாணவர் கவின்பிரசாந்த்-க்கு நிதியுதவி!
அறிவுலகின் ஆயுதம் ஐஐடி மாணவர் கவின்பிரசாந்த்-க்கு நிதியுதவி!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள மில்மேடு-காளிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் R.கவின் பிரசாந்த். வணிகவியல் துறையில் இளங்கலை பட்டம் (B.Com) பெற்ற விவசாயத் தம்பதிகளான திரு.R. இரவி - திருமதி R.இராஜேஸ்வரி ஆகியோரின் மூத்த மகனான R.கவின் பிரசாந்த், கடந்த ஆண்டு நடைபெற்ற JEE தேர்வில் வெற்றிபெற்று, மத்திய அரசு நிறுவனமான சென்னை ஐஐடி கல்லூரியில் இளங்கலை எந்திரவியல் (B.E., Mech) துறையில் சேர்ந்து முதலாமாண்டு படித்து வருகிறார். நாடுமுழுவதிலுமுள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 233 பேர் கவின் பிரசாந்த்தின் வகுப்புத் தோழர்களாக உள்ளனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற முதல் பருவத்தேர்வில் 10க்கு 9 மதிப்பெண் பெற்று கவின் பிரசாந்த் மூன்றம் இடம் பிடித்துள்ளார்.
21-ஆம் நூற்றாண்டு அறிவுலகின் காலமாக அறிசார் துறைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதில் கம்பளத்தாரின் முகமாக விளங்கும் கவின் பிரசாந்த்-க்கு நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.பவுல்ராஜ் அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்திற்கு கோரிக்கை வைத்திருந்தார். இக்கோரிக்கையை பரிசீலித்த சங்க நிர்வாகம், கவின் பிரசாந்த் சாதனையை பாரட்டும் வகையில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் இருந்து விலக்கு அளித்து நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்தது.
இதனடிப்படையில் வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் கவின் பிரசாந்த்-க்கு ஊக்கத்தொகையாக ரூபாய்.10000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) வழங்க முடிவு செய்யப்பட்டது. இன்று காலை செண்பகப்புதூரில் பட்டக்காரர் சதீஸ்குமார் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றியக்குழு உறுப்பினர் வி.என்.சின்னச்சாமி மற்றும் ஒருங்கிணைப்பாளர் பவுல்ராஜ் ஆகியோர் கவின்பிரசாந்த்தின் தந்தை ரவியிடம் சங்கத்தின் சார்பில் காசோலையை வழங்கினர். இந்நிகழ்வில் தொழிலதிபர்கள் தங்கராஜ், மோகன், திமுக இளைஞரணி அமைப்பாளர் விஜயகுமார், காங்கிரஸ் கட்சி பிரமுகர் வினோத் மற்றும் ரமேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
காசோலையை பெற்றுக்கொண்ட கவின்பிரசாந்த்தின் தந்தை ரவி சங்கத்திற்கும், சங்கத்திற்கு உறுதுணையாக ஈரோடு மாவட்டத்தில் தீவிரமாக களமாடி நிதிதிரட்டிய பவுல்ராஜ், தங்கராஜ் மற்றும் மோகன் அகியோருக்கும், சமுதாயத்தின்பால் அக்கறைகொண்டு முப்பெரும்விழாவுக்கு நிதியுதவி அளித்த பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இதேபோல் கடந்த சனிக்கிழமை 11.03.2023 மாலை 5 மணி அளவில் நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ழ்சி ஒன்றில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், குன்னமலை அஞ்சல் சிக்கநாயக்கன்பாளையம் கிராமம் விவசாயி பழனிச்சாமி என்பவர் மகன் ப.கிரிசங்கர் என்ற மாணவனைப் பாராட்டி மருத்துவம் சார்ந்த பாடப்புத்தகங்ள் வாங்க ரூபாய்.10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) உதவித்தொகை வழங்கப்பட்டது.

