வரலாறு காணாத அளவு +2 தேர்வில் கலந்துகொள்ளாத மாணவர்கள்- வெளியான அதிர்ச்சி தகவல்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வை மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரம் பேர் எழுத இருப்பதாக கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற மொழிப்பாடத்தை 50674 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியிருந்த நிலையில் புதன்கிழமை நடைபெற்ற ஆங்கிலமொழி பாடத்தையும் அதே அளவிலான மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கல்வியறவு அதிகமுள்ள மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் 6 சதவீதத்திற்கு அதிகமானோர் தேர்வு எழுதாமல் இருப்பது குறித்து பல்வேறு கட்சித்தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தேர்வுக்கு வராத மாணவர்களின் பட்டியலை தயாரித்து, அந்த மாணவர்களுக்கு உளவியல் கலந்தாய்வு வழங்க வேண்டும் என்றும் அடுத்து வரும் துணை தேர்வுகளில் அம்மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறும்போது, குடும்ப சூழ்நிலை அல்லது தேர்வு பயம் காரணமா அல்லது 11-ம் வகுப்பு 12ஆம் வகுப்பு என 2 பொதுத் தேர்வுகள் எழுதுவதால் ஏற்படும் அழுத்தம் காரணமாக என்பது குறித்து ஆராயப்படும் என்றும் அதிகமாக தேர்வு எழுத தவறிய மாணவர்கள் உள்ள கிருஷ்ணகிரி, கரூர், தர்மபுரி உள்ள மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்வு எழுதாத மாணவர்களை அடையாளம் கண்டு துணைத்தேர்வில் கலந்துகொள்ள முயற்சி மேற்கொள்ளபடும் என்றும் தனித்தேர்வு நடத்தும் திட்டமில்லை என்றும் கூறியுள்ளார்.