மத்திய அரசின் சிறந்த ஊராட்சி மன்றத் தலைவர் விருதை வென்றார் தாமரைச்செல்வன்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (Mahatma NREGA) சிறப்பாக செயல்படுத்தியதற்காகவும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும் அனிமூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு மத்திய அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே அனிமூர் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் தாமரைச்செல்வன். திமுக வில் முக்கியப்பதவியிலுள்ள தாமரைச்செல்வன், அனிமூர் ஊராட்சியில் உள்ள குப்பைக்கிடங்கை அகற்றுவதற்காக தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை எடுத்துவருபவர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் செயல்படும் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தை சிறப்பான முறையில் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தியமைக்காகவும், கொரோனோ பெருந்தொற்று காலத்தில் அரசின் வாழிகாட்டுதலை தனது ஊராட்சியில் முழுமையாக கடைபிடித்து, பொதுமக்களை கொரோனோ பாதிப்பிலிருந்து காப்பாறியமைக்காகவும் சிறந்த ஊராட்சி மன்றத் தலைவராக தாமரைச்செல்வன் அவர்களை தேர்வு செய்துள்ளது மத்திய அரசு.
இதற்கான விருது வழங்கும் விழா நேற்று புதுடெல்லியிலுள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 100 ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு விருது வழங்கினார் மத்திய அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங். இந்நிகழ்வில் நேரில் கலந்துகொண்ட அனிமூர் ஊராட்சி மன்றத் தலைவர் தாமரைச்செல்வன் மத்திய அமைச்சர் வி.கே.சிங் அவர்களிடம் விருதினை பெற்றுக்கொண்டார்.
சிறந்த ஊராட்சி மன்றத் தலைவருக்கான மத்திய அரசு விருதினை வென்றுள்ள தாமரைச்செல்வனுக்கு நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.