எடப்பாடியாரை பொதுச்செயலாளராக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்!
எடப்பாடியாரை பொதுச்செயலாளராக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்!
இந்திய தேர்தல் ஆணையம் முன்னாள் முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமியை பொதுச்செயலாளராக நேற்று அங்கீகாரம் அளித்ததின் மூலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் நிலவிவந்த குழப்பம் ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
முன்னதாக 2022 ஜூலை மாத பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமைக்கான கோஷம் எழுந்ததையடுத்து நடைபெற்று வந்த உட்கட்சிப்பூசல் கிழமை நீதிமன்றம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை பல வழக்குகளை சந்தித்து வந்தது. ஒரே ஒருமுறை ஒற்றை நீதிபதி நீதியரசர் ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பைத் தவிர ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு சாதகமான முடிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒன்றைத் தவிர அனைத்து வழக்குகளிலும் வெற்றிபெற்று வந்த எடப்பாடியார் தரப்பிற்கு இந்திய தேர்தல் ஆணையம் மட்டுமே இதுவரை சாதகமான பதிலை வழங்காமல் இருந்து வந்தது.
இதற்கிடையே கர்நாடக சட்டமன்றத் தேர்தலையோட்டி இந்திய தேர்தல் ஆணையத்தை டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விரைவாக தீர்வுகான எடப்பாடியார் வலியுறுத்திய நிலையில். பத்து நாளில் முடிவெடுத்து அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து நேற்று இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து, ஆணைய ஆவணங்களில் திருத்தம் செய்துள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னமும் எடப்பாடியார் தரப்பிற்கு உறுதியாகியுள்ளது.
ஓருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பான மூலவழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு அதிமுக சம்மந்தமான எல்லா முடிவுகளையும் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்பட்டாலும், அதுவும் ஓபிஎஸ் தரப்பிற்கு சாதகமாக இருக்காது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.