சென்னையில் மாபெரும் போராட்டம்! படைதிரண்டு வாரீர்...வாரீர்...
இந்தியாவில் 2021-இல் நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட வேண்டுமென்பது பலவேறு தரப்பினரின் கோரிக்கை. மத்திய அரசுப்பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற சட்டம் இருந்தாலும், நடைமுறையில் இதுவரை 14 முதல் 16 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே பல்வேறு மாநிலங்களில் இடஒதுக்கீடு சம்மந்தமாக வழக்குகள் வரும்போதெல்லாம் சாதிவாரி புள்ளி விவரம் (தரவுகள்) எங்கே? என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் எழுப்பி வருகிறது. இதனையடுத்து பீகார் மாநில அர்சு மாநிலத்தின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தீர்மானித்தி, முதற்கட்டம் நிறைவுபெற்று, இரண்டாவது கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தயாராகி வந்த நிலையில் பாட்னா உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இதற்கிடையே நாடுமுழுவதும் ஒரே நேரத்தில் எடுத்து முடிக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது சாதிவாரி புள்ளி விபரங்களை சேகரிக்க வேண்டுமென்று பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக 70 சதவீதத்திற்கும் குறையாத இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% விழுக்காடு வழங்கிவரும் வேளையில் 5 % மட்டுமே மக்கள்தொகைகொண்ட உயர்சாதி பிராமணர்கள், இராஜ்புத் உள்ளிட்டோருக்கு 10% தனி இடஒதுக்கீடு வழங்க சட்டமியற்றியுள்ள மத்திய அரசு, அதை நடைமுறைப்படுத்தி வருகிறது. 70% இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதில் 50% பதவியிடங்களில் மட்டுமே வாய்ப்பளிக்கப்படுகிறது. முழுக்க முழுக்க உயர்சாதியினரின் நலனில் மட்டுமே அக்கறையுள்ள அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
பல லட்சக்கணக்கான இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் வேலைவாய்ப்பை மறுத்து உயர்சாதியினர் மீது அக்கறையோடும், கரிசனத்தோடும் செயல்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கு வகையில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் கூட்டமைப்பு சார்பில் தலைநகர் சென்னையிலுள்ள வள்ளுவர்கோட்டம் அருகே ஜூன் 12 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. எதிர்கால தலைமுறையினரின் நலனுக்காக நடைபெறும் இப்போராட்டத்தி சமுதாய தலைவர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டுமென்று நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெ.ராமராஜ், விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் ஆகியோர் கூட்டாக வலியுறுத்தி உள்ளனர்.