உஸ்மானியா பல்கலைக்கழக துணைவேந்தருடன் பொதுச்செயலாளர் சந்திப்பு!
நாட்டின் புகழ்வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்திலுள்ள உஸ்மானியா பல்கலைக்கழக துணைவேந்தருடன் சென்னை, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் ராமராஜ் சந்தித்துப்பேசினார். இதுகுறித்து இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அகில இந்திய யாதவ மகாசபையின் பொதுச்செயலாளரும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான லட்சுமண் யாதவ் இல்லத்திருமண விழா கடந்த புதன்கிழமை (07.06.2023) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக ஹைதராபாத் சென்றிருந்த இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களையும், சமுதாய அமைப்புகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார்.
இதனொரு பகுதியாக உஸ்மானியா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர்.ரவீந்தர் அவர்களை திருமண விழாவில் சந்தித்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று காலை (வியாழக்கிழமை, 08.06.2023) உஸ்மானியா பல்கலைக்கழகத்திலுள்ள துணைவேந்தர் அலுவலகத்தில் நலச்சங்கப் பொதுச்செயலாளர் தனியாக துணைவேந்தரை சந்தித்தார். சுமார் 45 நிமிட நேரம் நீடித்த இந்த சந்திப்பில் தமிழகத்திலுள்ள கம்பளத்தார்களின் பூர்வீகம், மதுரை நாயக்கர் ஆட்சி, பாளையக்காரர்கள் வரலாறு உள்ளிட்ட பல விவரங்கள் துணைவேந்தருக்கு விளக்கப்பட்டது. மேலும் தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் பல்வேறு உட்பிரிவுகளைக்கொண்ட கொல்லவார் சமுதாயத்தினர் ஒருங்கிணைந்து யாதவ் என்ற பொதுப்பெயரில் ஒன்றிணைந்து உள்ளூர் அரசியலிலும், அகில இந்திய அரசியலும் செல்வாக்கு செலுத்துவது குறித்து துணைவேந்தர் எடுத்துரைத்தார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.