இரண்டே ஆண்டுகளில் கார் உற்பத்தியில் காத்திருக்கும் புதிய புரட்சி!
வரும்காலத்தில் ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை தீர்மானிப்பது இனி அந்த நாடு மின்சார வாகனங்களுக்கு எத்தனை பேட்டரி தயாரிக்கிறது என்பதைப்பொருத்தே இருக்கும் எங்கிறார்கள் வல்லுநர்கள்.
உலகின் பிற நாடுகள் அனைத்தும் தயாரிக்கும் பேட்டரியின் எண்ணிக்கையை விட 2030 இல் சீனா இரு மடங்கு தயாரிக்கும். இத்தனைக்கும் பேட்டரி தயாரிக்க தேவையான லித்தியம், கோபால்டு போன்ற அரிய வகை உலோகங்கள் சீனாவில் மிகக் குறைவு. சிறிய ஆப்பிரிக்க நாடுகளில் தான் இவ்வகை உலோகங்கள் அதிகமாக உள்ளது .
சீனா 1990 முதல் ஓசையின்றி இந்நாடுகளின் சுரங்கங்களை நீண்ட கால குத்தகைக்கு எடுத்துக் கொண்டது. தற்சமயம் மேற்குறிப்பிட்ட அடிப்படை உலோகங்கள் எந்த நாட்டிற்கு எவ்வளவு, என்ன விலையில் கிடைக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் இடத்தில் சீனாவே இருக்கிறது. லித்தியம்,கோபால்டு, தாமிரம், நிக்கல் போன்ற உலோகங்களை சுத்திகரிக்கும் ஆலைகள் 75% முதல் 95% சீனாவில் மட்டுமே உள்ளது.
சீன கார் உற்பத்தி நிறுவனங்களான BYD, Nio மற்றும் Li Auto ஆகியவை ஐரோப்பிய நுகர்வோர் மத்தியில் ஆதிக்கம் செலுத்துவதில் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் 15 சதவீத அளவுக்கு ஐரோப்பிய மின்சார வாகன சந்தைகளை கைப்பற்ற முடியும் என்று திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன.
இதற்கு மத்தியில், லித்தியம் ஒரு அரிதான தனிமம் மற்றும் விலை உயர்ந்தது என்றும், இதற்கு மாற்றாக சோடியம் அயன் பேட்டரிகள் தயாரிப்பு வெகு தூரத்தில் இல்லை. அதற்கான ஆராய்ச்சிகளும் சோதனைகளும் வெற்றிகரமாக நடந்துள்ளதாக சில செய்திகளை மேற்கோள் காட்டும் வல்லுநர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். சோடியம் எளிதாக கடலில் இருந்து கிடைப்பதால் அதன் விலை குறைவு இதுதான் இன்னும் சில ஆண்டுகளில் லித்தியம் அயன் பேட்டரிக்கு மாற்றாக வரப்போகிறது லித்தியம் தேவை இல்லாமலே போகும் என்ற கருத்தையும் முன்வைக்கின்றனர். இது தவிர, ஹைட்ரஜன் வாயும் ஓடும் கார்கள் வருவதற்கான வாய்ப்புகளையும் மறுப்பதற்கில்லை என்ற கருத்தும் நிலவுகிறது.
உலகம் இப்படியாக பயணித்திக்கொண்டிருக்கும் வேளையில் நம் நாட்டில் மின்சார பேட்டரிகள் சம்பந்தமாக அதிகம் பேசப்படுகிறது. விளம்பரங்கள் செய்திகள் அலங்காரமாக வருகின்றன. ஆனால் திட்டமிடுதல், செயல் திறன் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதற்கிடையே தமிழ்நாடு அரசு, World Economic Forum உடன் இணைந்து, "தமிழ்நாட்டை அடுத்த உலகளாவிய EV உற்பத்தி மையமாக உருவாக்குதல்" என்ற தலைப்பில் ஒரு முக்கிய ஆலோசனை கூட்டத்தை கடந்த வாரம் நடத்தி முடித்திருக்கிறது தமிழக அரசு. இக்கூட்டத்தில் உலகின் முன்னணி எலக்ட்ரிக் வாகனகளை தயாரிக்கும் நிறுவனங்களின் CEO க்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் EV ECOSYSTEM மேம்படுத்துவதற்கும், முன்னேற்றுவதற்கும், சூப்பர்சார்ஜ் செய்வதற்கும் "இந்தியாவின் EV தலைநகரம்" என்ற அளவுக்கு தமிழ்நாட்டை உயர்த்தும் முயற்சியில் முக்கியமாக இது பார்க்கப்படுகிறது.
மாறி வரும் தொழில்நுட்பத்தை கைப்பற்றுவதில் இந்தியா இன்னும் பின்தங்கியுள்ளதற்கு பிற்போக்கு சிந்தனையும், மாற்றத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியர்கள் காட்டும் தயக்கமுமே காரணம் என்ற குற்றச்சாட்டும் உண்டு.